பதிவு செய்த நாள்
08
பிப்
2018
04:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து, உயர்மட்ட ஆய்வுக்குழு நேற்று முதற்கட்ட விசாரணையை துவக்கியது.உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில், 2ம் தேதி இரவு, 10:15 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபம் அருகே, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழமை, புராதன சிறப்புமிக்க வீர வசந்தராய மண்டபம் இடிந்து விழுந்தது. 30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.தீ விபத்து குறித்து விசாரிக்க, பொதுப்பணித் துறை ஓய்வு முதன்மை பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமையில், 12 பேர் அடங்கிய உயர் மட்ட ஆய்வுக்குழுவை, ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் ஜெயா அமைத்தார். தீ விபத்து குறித்து ஆய்வு செய்து, நான்கு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாலசுப்ரமணியன், நேற்று காலை, 10:00 மணிக்கு வந்தார். தீ விபத்து நடந்த, வீர வசந்தராய மண்டபம் மற்றும் தீயில் எரிந்த கடைகளை ஆய்வு செய்தார். ஆயிரங்கால் மண்டபம், பழைய திருக்கல்யாண மண்டபம், வடக்கு, மேற்கு ஆடி வீதிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மதியம், 1:00 மணி வரை ஆய்வு நீடித்தது.சுவாமி சன்னதி, பழைய திருக்கல்யாண மண்டபம், வடக்கு மற்றும் மேற்கு சித்திரை வீதி சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து, போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.பாலசுப்ரமணியன் நமது நிருபரிடம் கூறும்போது, ”தீ விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்டோம்; கோவிலில், இன்று காலை, 10:00 மணிக்கு, ஆய்வுக்குழு கூட்டம் நடக்கிறது,” என்றார்.