பதிவு செய்த நாள்
16
பிப்
2018
10:02
கோவை : மஹா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக, கோவைக்கு அருகே தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது, வெள்ளியங்கிரி மலை. இதன் உச்சியில், சுயம்பு வடிவில் சிவன் வீற்றிருப்பதால், தென் கயிலாயம் என இது போற்றப்படுகிறது. புல்வெளி மற்றும் சோலைக்காடுகளைக் கொண்ட ஏழு மலைகளைக் கடந்து, கடுமையான மலையேற்ற பயணத்தில், இந்த வெள்ளியங்கிரி மலையை அடைவது, எல்லோருக்கும் சாத்தியமான விஷயமில்லை.
எனவே, இந்த மலையுச்சிக்குச் சென்று ஈசனைத் தரிசிப்பதை, பக்தர்கள் பெரும் வரமாகக் கருதுகின்றனர். முழுக்க முழுக்க காப்புக்காடு பகுதியாக இருப்பதுடன், வன விலங்குகள் நடமாடும் பகுதி என்பதால், இந்த மலைப்பயணத்துக்கு, கோடை காலத்தில் மட்டுமே வனத்துறையால் அனுமதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பிப்.,1லிருந்து, மே 31 வரையிலான நான்கு மாதங்களுக்கு மட்டுமே, வனத்துறையிடம் அனுமதி பெற்று, இங்கே செல்லலாம். வழக்கமாக, சித்ரா பவுர்ணமியை ஒட்டியே, இரு நாட்களில், இரண்டு லட்சம் பக்தர்கள், கிரி மலை ஏறுவர். ஆனால், இந்த ஆண்டில், வரலாறு காணாத அளவில், மஹா சிவராத்திரி நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், மலையேறி, இயற்கையாக எழுந்தளியிருக்கும் ஈசனை வணங்கியுள்ளனர். வனத்துறை ஊழியர்கள், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பினர் இணைந்து, பக்தர்களிடம் பிளாஸ்டிக் பைகளை வாங்கிக்கொண்டு, துணிப்பை மற்றும் பேப்பர் கவர் கொடுத்தனர்.
பிளாஸ்டிக் பாட்டில்கள், சோப்பு, ஷாம்பூ போன்ற பொருட்களை, யாரும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த ஆண்டில், பக்தர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில், ஏழு மலைகளில் உள்ள பாதைகளிலும் முட்புதர்கள் அகற்றப்பட்டிருந்தன. ஆறாம் மலையிலுள்ள ஆண்டிச்சுனை, துார் வாரப்பட்டு, நிறைய தண்ணீருடன் இருந்ததால், பக்தர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். அதேபோன்று, தேங்காய் உருட்டும் குகை, 40 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டிருந்தது. மே 31 வரையிலும், இந்த மலைக்கு, பக்தர்கள் தனியாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகை, சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில், பெருமளவில் பக்தர்கள், இந்த மலைக்குச் செல்வார்கள். குறிப்பாக, சித்திரை முதல் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், மலையேறுவது வழக்கமாகவுள்ளது. மே 31ம் தேதிக்குப் பின், இந்த மலைக்குச் செல்வது, ஆபத்து விளைவிக்கும் என்பதால், வனத்துறை அனுமதி தருவதில்லை.