பதிவு செய்த நாள்
17
பிப்
2018
11:02
பழநி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து எதிரொலியாக, பழநி முருகன் கோயிலில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் மூலம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து காரணமாக, பழநி, திருச்செந்துார், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய கோயிலில் தீ விபத்து முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு முகாம் நடத்த, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா உத்தரவிட்டுள்ளார். அதன்படி பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில், பணியாளர்களுக்கு தீ விபத்து விழிப்புணர்வு, தடுப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர்(பொ) சந்திரகுமார், நிலைய அலுவலர்கள் பழநி மோகன், திண்டுக்கல் சக்திவேல், தீ தடுப்புகுழு கணேசன் முன்னிலைவகித்தனர். இதில் சமையல் செய்யும்போது காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைக்க வேண்டும். மேல்மாடியில் ஒருவர் விபத்தில் சிக்கினால் அவரை மீட்பது எப்படி, தீயணைப்புக் கருவிகளை கையாளும்விதம் குறித்து செயல்முறை விளக்கமாக, கோயில் பணியாளர்கள், செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தை தொடர்ந்து, பழநி போன்ற முக்கிய கோயிலில் தீ மற்றும் விபத்து முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் காணொலி கண்காட்சி மூலம் அறிவுரை வழங்கினார். அதன்படி, மலைக்கோயில், உபகோயில்களில் தீவிபத்தை தடுக்க தீயணைப்புகருவிகள் தயார் நிலையில் உள்ளன.தீ விபத்து, கூட்டநெரிலில் பக்தர்கள் மயங்கிவிழுந்தால் முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகள் அடிக்கடி வழங்கப்படும்என்றார்.