பதிவு செய்த நாள்
20
பிப்
2018
03:02
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பத்துநாள் உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்னு மாசிமக விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மாசிமக விழாவில் சிவாலயங்கள் மற்றும் வைணவத் தலங்களில் கொடியேற்றி பத்துநாள் உற்சவம் நடைபெறும். இதையடுத்து நேற்று மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர்கோவில், காளகஸ்தீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர்கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலங்களில் கொடியேற்றத்துடன் இன்று விழா துவங்கியது. முதலாக ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலில் முருகன், விநாயகர், கும்பேஸ்வரர், மங்களாம்பிகை உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியும், கொடிமரத்திற்கு மஞ்சள்,பால்,மலர்கள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.
இதில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 23ம் தேதி அறுபத்து மூவர் வீதிவுலாவும், 24ம் தேதி ஓலைச்சப்பரமும், 27ம் தேதி ஐந்து தேரோட்டமும், மார்ச் 1ம் தேதி மகாமக குளத்தில் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது. அதே போல் அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர் கோவில் சார்பில் 28 ம் தேதி மாலை மகாமக குளக்கரையில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. வைணவத் தலங்கள்: வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணிகோவில், ராஜகோபாலசுவாமிகோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில்,நாளை (21ம் தேதி) பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 1ம் தேதி காலை 9 மணிக்கு சக்கரபாணி கோவிலில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. பின்னர் 12 மணியளவில் காவிரி ஆற்றில் சக்கரப் படித்துறையில் வைணவக் கோவில்கள் சார்பில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. மாசிமக விழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர். இந்தாண்டு மகாமக குளத்திலும், பொற்றாமரைக் குளத்திலும் பக்தர்கள் நீராடுவதற்கு போதியளவு தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை. கடந்த ஆண்டை போல் காவிரியில் மின்மோட்டார் மூலம் நீராட வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.