பதிவு செய்த நாள்
23
பிப்
2018
10:02
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும், மாசி பிரம்மோற்சவம் மற்றும் நேற்று நடந்த கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவம், கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று, காலை, 9:30 மணிக்கு, மலைக்கோவிலில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7:30 மணிக்கு, ஆட்டுக் கிடாய் வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதுதவிர, நேற்று, மாசி மாத கிருத்திகையையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. இந்த அபிஷேகம் மற்றும் பிரம்மோற்சவ விழாவில், திரளான பக்தர்கள் மூலவரை வழிபட்டனர். இன்று நடக்கும், நான்காம் நாள் பிரம்மோற்சவ விழாவில், காலை, 9:30 மணிக்கு, பல்லக்கு சேவை, இரவு, 7:30 மணிக்கு, வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.