பதிவு செய்த நாள்
14
மார்
2018
12:03
திருவிடந்தை: நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், கொடிமரம் ஒப்படைக்கப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், நித்ய கல்யாண பெருமாள் கோவில் அமைந்து, 108 வைணவ கோவில்களில், 62ம் கோவிலாக விளங்குகிறது. மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடன்; உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடன் வீற்றுள்ளனர்.
திருமணம், மகப்பேறு, ராகு கேது தோஷ, பரிகார கோவிலாக சிறப்புற்று விளங்கும் நிலையில், 2006ல் நடந்த கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, மீண்டும் நடைபெறவில்லை. பாரம்பரிய சின்னமாக இந்த கோவிலை, தொல்லியல்துறை நிர்வகிக்கும் நிலையில், அத்துறையினர் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அத்துறை பணிகள் முடிந்ததும், அறநிலையத்துறை நிர்வாகம், புதிய கொடிமரம் அமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்தது. கொடிமரத்திற்காக, 50 அடி உயரம், 5 - 7 அடி சுற்றளவு தேக்கு மரம் தேவைப்பட்டச் நிலையில், தமிழக, கேரள வனத்தில், ஓராண்டிற்கும் மேலாக முயன்றும் கிடைக்காமல் தாமதமானது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், சென்னை மரவாடியில், தேவைக்கேற்ற அளவு பர்மா தேக்கு, நன்கொடையாளர் மூலம் கிடைத்தது. அங்கேயே, கொடி மரத் தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது கோவிலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளின்படி, கொடிமரம் நட வேண்டிய நாள் குறித்து, கோவில் அர்ச்சகரிடம் அறிந்து, துறை அனுமதி பெற்று, அடுத்த மாத இறுதியில் நட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.