பத்மாவதி தாயார் சாக்ஷாத் மஹாலக்ஷ்மி. விஷ்ணுவின் திருமார்பில் உறைபவள். எனவேதான் ஆழ்வார், அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா என பாசுரமிடுகிறார். எந்த ஜீவனும் சுகசாந்தியோடு உயிர் வாழ வேண்டுமெனில் லக்ஷ்மியின் அருட்பார்வை தேவை. எனவே அவளுக்கு ஸ்ரீ என்றும் லக்ஷ்மி என்றும் பெயர்கள் உள்ளன. ஸ்ரீ என்றால் அனைவராலும் ஆச்ரயிக்கப்படுவது. லக்ஷ்மி என்றால் அனைவருக்கும் இலட்சய ஸ்தானம் போன்றது எனப் பொருள்படும். இவ்வுலகில் உள்ள பொருட்களனைத்தும் லக்ஷ்மியின் வடிவங்களே. பரம அணுவிலிருந்து பரப்பிரம்மா வரை உள்ள அனைத்திலும் அவற்றின் பக்தியின் வடிவாக ஆதிலக்ஷ்மி திகழ்கிறாள். பத்மாவதி தாயார் ஒரு காரணத்திற்காக திருச்சானூர், பத்மசரோவரத்தில் அவதரித்தாலும் அவள் அவதரிப்பதற்கான காரணத்தை ஆய்வு செய்தால் அவள் சாக்ஷாத் வைகுண்டத்தில் உறையும் லக்ஷ்மி என்னும் உண்மை விளங்கும்.
திருமலையப்பனுக்கு பிரம்மா தான் சுயமாக முன்னின்று உத்ஸவத்தை நடத்தினாலும் அது ஸ்வாமிக்கு மட்டுமின்றி ஸ்வாமியின் திருமார்பில் வாசம் செய்யும் நாச்சியாருக்கும் சேரும். பக்தர்களின் உய்விற்காக தாயார் மலையின் கீழ் இருந்தாலும் மலையப்பனுக்கு நடைபெறும் பிரம்மோத்ஸவ வேடிக்கை எல்லாம் தாயாருக்கும் உண்டு. தாயார் கார்த்திகை மாதம் அவதரித்ததின் காரணமாக திருமலையப்பனுக்கு நடைபெறுவது போன்று ஒன்பது நாட்கள் பிரம்மோத்ஸவம் நிர்வகிப்பது வழக்கம். ஒரு காலத்தில் எம்பெருமானின் பிரம்மோத்ஸவமும் திருச்சானூரிலேயே நடைபெற்றது. எனவே எம்பெருமானுக்கும் எம்பெருமாட்டிக்கும் வேறுபாடு இல்லை. படிப்படியாக திருமலை திவ்விய க்ஷேத்திரம் விரிவடைந்த பிறகு அங்கேயே ஸ்வாமிக்கு பிரம்மோத்ஸவம் நடைபெறுகின்றது. அவரவர் க்ஷேத்திரத்தில் அவரவருக்கு உத்ஸவங்கள் நடைபெறுவது நியாயம் தானே!
தாயாரின் உத்ஸவத்தையும், பிரம்மோத்ஸவம் என்றழைப்பதில் பிரம்மா முன் நின்று நடத்துவது என்பது பொருள் அன்று. பிரம்மா என்னும் சொல்லிற்கு பெரிய என்றே பொருள். பரப்பிரம்மம் என்னும் பொருளும் உண்டு. இவ்விரு பொருளிலும் அமைவதே தாயார் பிரம்மோத்ஸவம்.
தாயார் செல்வத்தாய். திருமாமகள். செல்வம் எங்ஙனம் இருக்க வேண்டுமெனில் ஆகஜாந்தம் ஐச்வர்யம் எனப்பெரியோர் கூறுவது போன்று. தன் வீட்டு வாசல் முன்பு யானைகள் இருந்து அவற்றின் பிரணவநாத ஒலியைக் கேட்டு எழுந்திருப்பார்களானால் அது மஹைச்வர்யம். ஸ்வாமிக்கு கருடனைப் போன்று தாயாருக்கு யானை வாகனம் முதன்மையானது. பிறவாகனங்கள் எத்தனையிருப்பினும் (கஜம்) யானை என்பது உலகிற்கு ஒப்புமை. க என்பது கச்சதி (போவது) ஜ என்பது ஜாயதி (பிறப்பது), இது உலக இயல்பின் சின்னமாகும். எனவே ஐச்வர்யத்திற்கு ஒப்புமையாக தாயாரின் கஜவாகன உத்ஸவம் சிறப்பு பெறுகிறது. இது குறித்தே பேரசர்களும், பட்டத்து யானைகளை முதன்மையாக வைத்திருப்பர். படைத்தல், காத்தல், அழித்தல் பணியினை பகவானே பண்ணினாலும், ஆதிசக்தியான ஆதி லக்ஷ்மி உதவியுடன் இவையனைத்தும் நடக்கிறது. செல்வம் மட்டும் மஹாலக்ஷ்மி அன்று. தனமக்நி: தனம் வாயு: தனம் சூர்யோ, தனம் வசு... என்று ஸ்ரீசூக்தம் அக்நி, வாயு, சூரியன், இந்திரன் முதலானவர்களனைவரும் செல்வத்தின் வடிவங்களே எனக் கூறப்படுகிறது. ஒரு நபரை உய்விப்பது செல்வம் அச்செல்வமே லக்ஷ்மி. இயற்கையில் உள்ள அஷ்ட சக்திகளே அஷ்ட லக்ஷ்மி வடிவினளாய் இவ்வுலகினை காக்கின்றாள். இது குறித்தே லக்ஷ்மிக்கு ஜகத் போஷினீ என்றும் பெயர். பத்மாவதி தாயார் தாமரை மலரில் அவதரித்திருப்பது என்பது பௌதிக காரணம். அத்தாமரை யோக சாத்திரத்தில் சஹஸ்ரார பத்மம் அவற்றிலிருந்து அவதரித்த சக்தியே ஞான லக்ஷ்மி ஞானம் அல்லாத சம்பாத்யம் சாம்பலில் ஊற்றின் பன்னீராகும்.
பஞ்சபூதங்கள் தன் வசமே உள்ளன எனச் சொல்வது பஞ்சமி எண்ணின் சிறப்பு. செல்வத்தாய் மலைகளில் மட்டுமின்றி, பக்தர்களின் மனதில் வாழ்வது நம் அதிருஷ்டம், பாக்யம்.
பஞ்சமி நாளன்று ஸ்வாமியிடமிருந்து சீதனமாக மங்களப் பொருட்கள் திருச்சானூர் வந்து சேர்கின்றன. மங்கள தேவதைக்கு ஸ்வாமி அனுப்பும் மங்களப் பொருட்கள் பக்தகோடிக்கு மகாபிரசாதமாகி சர்வமங்களங்களுக்கும் காரணமாகின்றது. எனவே இத்தாயார் பிரம்மோத்ஸவம் உலக நாயகியான ஆதிலக்ஷ்மிக்கு நடப்பது. எனவே பக்தர்கள் இந்த திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோத்ஸவத்தில் அதிக அளவில் பங்கு கொண்டு மங்கள தேவதையான தாயாரின் திருவருளுக்கு பாத்திரமாவார்கள் என நம்புகிறோம்.