தேனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று ஊர்பொங்கல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை யொட்டிஏப்.18ல் கொடிக்கம்பம் நடப்பட்டது. முக்கிய நிகழ்ச்சி களான மலர் விமானத்தில் அம்மன் ஊருக்குள் வருதல், பல்லக்கில் அம்மன் புறப்பாடு, பூப்பல்லக்கு நடந்தது. மே 11 ல் தேரோட்டம் துவங்கியது.
பல்வேறு மண்டகப்படிகளுக்கு சென்று மே 14 ல் தேர் நிலைக்கு வருதல், சப்பரத்தில் அம்மன் தேர்தடம் பார்த்தல் நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று(மே 15)ல் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கோயிலை சுற்றி ஊர்பொங்கல் வைக்கப் பட்டது. வீரபாண்டி பேரூராட்சி முழுவதிலும் உள்ள மக்கள் தங்களின் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர். முல்லைபெரியாற்றில் ஏராள மான பக்தர்கள் நீராடினர்.