பதிவு செய்த நாள்
18
மே
2018
01:05
ஊத்துக்கோட்டை : வெலமகண்டிகை வீரஆஞ்சநேய சுவாமி கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து தீமிதித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலுார்பேட்டை அருகே உள்ளது, வெலமகண்டிகை கிராமம். இங்கு, 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, வியாச மகிரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது.கடந்த, 10ம் தேதி, பிரம்மோற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும், காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, சுவாமிக்கு அபிஷேகம், 10:00 மணி முதல், 11:00 மணி வரை சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும். மதியம், 2:00 மணி முதல், 6:00 மணி வரை ஹரிகதை நடைபெறும். விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், வெலமகண்டிகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து தீமிதித்தனர். உற்சவர், சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.