திரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2018 12:05
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கானுார் பெரியநாச்சியம்மன் கோயில் திருவிழாவிற்காக மதுரையில் இருந்து பூஜை பொருட்களை வாங்கி மண்பானையில் வைத்து தலைச்சுமையாக 54கி.மீ., திரும்பி பார்க்காமல் பயணம் செய்து வழிபட்டனர் பக்தர்கள். கானுாரில் பெரியநாச்சியம்மன் கோயில் வைகாசி திருவிழா 18ம் தேதி தொடங்கியது. எட்டு நாட்கள் நடக்கும் விழாவில் நேற்றுதுாதை வைகை ஆற்றில் இருந்து அம்மனுக்கு கரகம் எடுத்து வந்து பூஜை நடந்தது. பூஜை பொருட்களை மதுரையில் வாங்கி மண்பானையில் வைத்து தலைச்சுமையாக கோயில் வரை 54 கி.மீ., நடந்தே கொண்டு வந்துள்ளனர். பொருட்களை கொண்டு வருபவர்கள் திரும்பி பார்க்கக்கூடாது என்பது விதி அதன்படியே பொருட்களை கொண்டு வந்துள்ளனர்.
பக்தர்கள் கூறியதாவது: ஆறு வருடங்களுக்கு பிறகு திருவிழா நடத்த இப்போது தான் அம்மன் உத்தரவு கிடைத்துள்ளது. விபூதி, சந்தனம், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை மூன்று மண் பானைகளில் வைத்து அதிகாலை நான்கு மணிக்கு மதுரையில் கிளம்பி மதியம் ஒரு மணிக்கு கானுார் வந்து விடுவோம், போகும் போதும் வரும்போதும் நடந்தே தான் செல்லவேண்டும். கோயிலில் 21 காவல் தெய்வங்கள் உள்ளன. எட்டு நாட்களும் இந்த தெய்வங்களுக்கு பூஜை நடைபெறும், என்றனர்.