பதிவு செய்த நாள்
18
ஜூன்
2018
11:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் மணி மண்டபத்தில், நுாதன நந்தி மண்டபம் மற்றும் ராஜ கோபுரத்தின் மஹா கும்பாபிஷேக விழா, 22ல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மகா சுவாமிகளின் மணி மண்டபம், கருங்கற்களால் கட்டப்பட்டு, 2011ல் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இரண்டாவது கட்டமாக, 48 அடி உயரம் கொண்ட, முழுவதும் கருங்கல்லால் ஆன, ராஜ கோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், கலை நயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய, 16 கருங்கல் துாண்களுடன், 47 அடி நீளம், 42 அடி அகலம் கொண்ட நந்தி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
அதன் நடுவில், 14.9 அடி நீளமும், 7 அடி அகலமும், 10 அடி உயரத்திற்கு கருங்கல்லால் ஆன, நந்தி ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. நந்தி மண்டபத்திற்கும், ராஜகோபுரத்திற்கும் இடையே, ஒரே கல்லால் ஆன, 50 அடி உயர தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின், மகா கும்பாபிஷேக விழா, 22ல், நடைபெறவுள்ளது.கும்பாபிஷேகத்தை ஒட்டி, 22ம் தேதி வரை தினமும் விசேஷ பாராயணம் நடைபெறுகிறது. வரும், 22, காலை, 8:15 மணிக்கு, ராஜகோபுர கும்பாபிஷேகமும், 9:12 மணிக்கு, நந்தி மண்டப கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான, ஏற்பாடுகளை, மகா லக் ஷ்மி மாத்ருபூதேச்வரர் அறக்கட்டளை அங்கத்தினர்களும், விதேய பக்த சிஷ்யர்களும் செய்து வருகின்றனர்.