மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரம் பகுதியில் உள்ள ‘ஸ்கேனர்’ செயல்படாமல் வீணாக கிடக்கிறது. இக்கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு கருதி 5 கோபுரங்களிலும் கோயில் சார்பில் ஸ்கேனர் கருவிகள் வைக்கப்பட்டன. பக்தர்கள் கொண்டு வரும் பொருள் ஆய்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் ராஜகோபுரம் மற்றும் அம்மன் சன்னதியில் இருந்த ஸ்கேனர்கள் பழுதாயின. இதனால் பக்தர்கள் பிற கோபுர வாசல்களுக்கு சென்று ஸ்கேன் செய்ய வேண்டியிருந்தது. இதுகுறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தொடர்ந்து கடிதம் எழுதியதால் தற்போது அம்மன் சன்னதி ஸ்கேனர் மட்டும் சரி செய்யப்பட்டது. போலீசார் கூறுகையில், ‘‘ஸ்கேனர்களை பராமரிக்க ஆண்டு பராமரிப்பு நிதி (ஏ.எம்.சி.,) கோயில் நிர்வாகம் செலுத்தினால் பயன் உள்ளதாக இருக்கும். ராஜகோபுரம் ஸ்கேனரில் ஏதோ ‘ஐசி’ போய்விட்டதாக கூறுகிறார்கள். யானை வாங்கியவர்கள் அங்குசம் வாங்காதது போல், ஸ்கேனர்கள் வாங்கியவர்கள் அதற்குரிய பராமரிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கையை எடுக்கவில்லை. தவிர, பக்தர்கள் உடைமைகள் பாதுகாப்பு அறை, அலைபேசி பாதுகாப்பு அறை மற்றும் ஸ்கேனர் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும்’’ என்றனர்.