பதிவு செய்த நாள்
16
ஆக
2018
04:08
துணிவே துணை என செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!
சூரியன், புதன், சனி மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக் கின்றனர். தற்போது சுக்கிரன் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் ஆக. 31 முதல் உங்கள் ராசிக்கு வருகிறார். அப்போது அவரால் நற்பலன் கிடைக்கும். இதனால் சிறப்பான பலனை காணலாம். பொருளாதார வளம் எந்த விதத்திலும் குறையாது. முயற்சியில் இருந்த தடைகள் விலகும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசு வகையில் அனுகூலம் உண்டாகும். குருபகவான் உங்கள் ராசியில் இருப்பது சிறப்பானது அல்ல. ஆனாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன.
குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். பெண்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுக்கிரனால் ஆக.31 க்கு பிறகு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். ஆக.17,18, செப். 13,14ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். நண்பர்களின் வழியில் பணஉதவி கிடைக்கும். ஆக.24,25ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதே நேரம் செப்.8,9,10ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆக.28க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கைகூடி வரும்.
பணியாளர்களுக்கு முன்னேற்றம் தொடர்ந்து கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த வேலைப்பளு குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை ஏதும் இல்லை. அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். ஆக.28க்கு பிறகு தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.
சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். செப். 6,7ல் கூடுதல் பலன்களை காணலாம். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செப். 14க்கு பிறகு வேலையில் பொறுமை, நிதானத்தை பின்பற்றுவது நல்லது. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பர். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். ஆக.19,20, செப்.11,12,15,16ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஆக.28,29,30ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஆக.31க்கு பிறகு மறையும். அதன் பிறகு ரசிகர்களின் மத்தியில் புகழ், செல்வாக்கு கிடைக்கப் பெறுவர். சக பெண் கலைஞர்கள் உறுதுணையாக செயல்படுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் ஆக. 31க்கு பிறகு சிறப்பான நன்மை கிடைக்கப் பெறுவர். புதிய பதவி தேடி வரும். மாணவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த தொய்வு நிலை மறையும். புதன் சாதகமாக இருப்பதால் வளர்ச்சி காணலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவர். செப்.14க்கு பிறகு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. இருப்பினும் குரு பார்வை பக்க பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறையிருக்காது. கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம்.
பெண்கள் நல்ல வளர்ச்சி அடைவர். உங்களால் குடும்பம் சிறக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி பெறுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் முன்னேற்றம் அடைவர். சேமிக்கும் விதத்தில் பண வரவு இருக்கும். குருவின் பார்வையால் கையில் எப்போதும் பணம் புழங்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஆக. 21,22,23ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. ஆக.31, செப்.1ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.14க்கு பிறகு வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகலாம். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
* நல்ல நாள்: ஆக.17,18,21,22,23,28,29,30, 31, செப்.1,6,7,8,9,10,13,14
* கவன நாள்: செப்.2,3 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,9
* நிறம்: பச்சை, சிவப்பு
பரிகாரம்:
● தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு
● வெள்ளியன்று நாகதேவதைக்கு பாலபிஷேகம்
● பவுர்ணமியன்று அம்மன் சன்னதியில் நெய்தீபம்.