பதிவு செய்த நாள்
20
ஆக
2018
11:08
மெக்கா: இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், ‘ஹஜ்’ புனித யாத்திரைக்காக, மெக்கா நகரில் குவிந்தனர்.
இஸ்லாம் மதத்தின், ஐந்தாவது மற்றும் இறுதி புனித கடமையான, ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற, வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில் உள்ள, இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில், ஆண்டுதோறும், ஐந்து நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான, ஹஜ் புனித யாத்திரைக்காக, உலகம் முழுவதும் இருந்து, மெக்கா நகரில், 20 லட்சம் பேர் குவிந்துள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும், 1.75 லட்சம் பேர், புனித யாத்திரை மேற்கொண்டு உள்ளனர்.
ஐந்து நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில், மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய பின், மினா நகருக்கு புறப்பட்டுச் செல்லும் யாத்ரீகர்கள், அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றி, அரபா மலையில், சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நாளை புறப்பட்டுச் செல்வர். புனித யாத்திரைக்காக, ஏராளமானோர் குவிந்துள்ளதால், புனித நகரங்களான, மெக்கா, மெதினாவை சுற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எதிர்பாராத அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், யாத்ரீகர்கள் அனைவருக்கும், மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டு உள்ளது. இது, கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து, பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ள உதவும்.