பதிவு செய்த நாள்
20
ஆக
2018
11:08
பழநி:பழநி முருகன்கோயில் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணியில், நேற்று முதல் கம்பி வடத்தில் பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடக்கிறது. பழநி முருகன் மலைகோயிலுக்கு மூன்று நிமிடங்களில் செல்லும் வகையில் ரோப்கார் தினமும் இயக்கப்படுகிறது. இது ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக செப்.,12 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிய கம்பிவடம், சாப்ட் பொருத்தப்பட்டுள்ளது. நேற்று கம்பிவடத்தில் பெட்டிகள் பொருத்தப்பட்டு முதற்கட்டமாக வெறும் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் குறிப்பிட்டஅளவு எடைக்கற்கள் வைத்து ரோப்கார் சோதனை ஓட்டம் நடக்கிறது. அதில் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டு, ரோப்கார் கமிட்டியினர் ஒப்புதல் அளித்தபின் விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளதாககோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வின்ச்சில் 2 மணி நேரம் காத்திருப்பு : ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ரோப்கார் நிறுத்தம் காரணமாக, வின்ச் ஸ்டேசனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். பழநி முருகன் மலைக்கோயிலுக்கு, வழக்கமாக சனி, ஞாயிறு தினங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். நேற்று ஞாயிறு அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், ரோப்கார் நிறுத்தம் காரணமாக, வின்ச் மூலம் மலைக்கு செல்வதற்கு இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் இரண்டுமணிநேரம் காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து கிரிவலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு தங்கரதப்புறப்பாட்டிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.