Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
21. வஞ்சின மாலை 23. கட்டுரை காதை
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
22. அழற்படு காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
05:01

அஃதாவது - மதுரை நகரத்தைக் கண்ணகி பணித்தவாறே பார்ப்பார் முதலிய நல்லோரைக் கைவிட்டுத் தீயோர் மருங்கிலே தீப்பற்றி எரிதலும் அப்பொழுது அந்நகரத்தின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும் கூறுகின்ற பகுதி என்றவாறு.

ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது
காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன
அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப்  5

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது
ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்  10

ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக்
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள   15

நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித்
(தண்கதிர் மதியத் தன்ன மேனியன்
ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து
வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று
இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன்  20

நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம்
புலரா துடுத்த உடையினன் மலரா
வட்டிகை இளம்பொரி வன்னிகைச் சந்தனம்
கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன்
தேனும் பாலும் கட்டியும் பெட்பச்   25

சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன்
தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும்
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று
பிற்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன்
நன்பகல் வரவடி யூன்றிய காலினன்  30

விரிகுடை தண்டே குண்டிகை காட்டம்
பிரியாத் தருப்பை பிடித்த கையினன்
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்)
முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு  35

ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்
(வென்றி வெங்கதிர் புரையும் மேனியன்
குன்றா மணிபுனை பூணினன் பூணொடு
முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு
சண்பகம் கருவிளை செங்கூ தாளம்  40

தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்
அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணங் கொண்ட மார்பினன்  45

பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன்
முகிழ்த்தகைச்
சாலி அயினி பொற்கலத் தேந்தி
ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து
வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில்) 50

பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்
ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின்
முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி
உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு
எனவிவை பிடித்த கையின னாகி   55

எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி
மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக்
கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு
நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்
(உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன  60

அரைச பூதத்து அருந்திறற் கடவுளும்
செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்
வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி   65

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்
உரைசால் பொன்னிறங் கொண்ட உடையினன்
வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல்
சேட னெய்தல் பூளை மருதம்
கூட முடித்த சென்னியன் நீடொளிப்  70

பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம்
தன்னொடு புனைந்த மின்னிற மார்பினன்
கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும்
நன்னியம் பலவும் நயந்துடன் அளைஇக்
கொள்ளெனக் கொள்ளும் மடையினன் புடைதரு  75

நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி
வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப்
பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில்
உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே
நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ்  80

சூழொளித் தாலு மியாழும் ஏந்தி
விலைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து
மலையவும் கடலவு மரும்பலம் கொணர்ந்து
விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு)
உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக்  85

கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர்
விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்
(கருவிளை புரையு மேனிய னரியொடு
வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக்  90

காழகம் செறிந்த உடையினன் காழகில்
சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவிற் கலந்த பித்தையன்
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச்  95

செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி)
மண்ணுறு திருமணி புரையு மேனியன்
ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்
ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற் கமைந்த பலதுறை போகிக்   100

கலிகெழு கூடற் பலிபெறு பூதத்
தலைவ னென்போன் தானுந் தோன்றிக்
கோமுறை பிழைத்த நாளி லிந்நகர்
தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப
தாமுறை யாக அறிந்தன மாதலின்   105

யாமுறை போவ தியல்பன் றோவெனக்
கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்
நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக்
கூல மறுகும் கொடித்தேர் வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்  110

(உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்
காவெரி யூட்டிய நாள்போற் கலங்க
அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது
மறவோர் சேரி மயங்கெரி மண்டக்
கறவையும் கன்றும் கனலெரி சேரா   115

அறவை யாயர் அகன்றெரு அடைந்தன
மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும்
விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன
சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை
மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன்  120

செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை
நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித்
துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங்கா ழாரம் பரிந்தன பரந்த   125

தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக்
காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத்
திதலை அல்குல் தேங்கமழ் குழலியர்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு
பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி  130

வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத
வருவிருந் தோம்பி மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி
இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை  135

கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப்
பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர்
எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற
பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித்
தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல்  140

பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு
நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு
எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ
இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து
தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ்  145

ஊர்தீ யூட்டிய ஒருமக ளென்ன
அந்தி விழவும் ஆரண ஓதையும்
செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும்
மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும்
வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர்க்  150

காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து
மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும்
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்   155
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதியென்.

வெண்பா

மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்- நாம
முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள்  160
மதுரா பதியென்னு மாது.

உரை

கோப்பெருந்தேவியின் செயல்

1-7: ஏவல் ................ அறியாது

(இதன்பொருள்.) ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது - மதுரையை எரியூட்டுக! எனப் பண்டும் அற்றைநாளும் ஏவல் பெற்றுள்ள அத் தீக் கடவுளின் எரிக்கும்கூறு வெளிப்பட்டு ஆங்காங்குத் தீப்பிழம்பு தோன்றிற்று; காவல் தெய்வம் கடை முகம் அடைத்தன - தொன்றுதொட்டு அந்த நகரத்தைக் காவல் செய்துவந்த தெய்வங்கள் அத் தொழிலைச் செய்யாது தம்முடைய திருக்கோயிற் கதவங்களை அடைத்துக் கொண்டன; அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் - மன்னர் மன்னனும் பகைவரை வெல்லும் போர்த்திறம் உடையவனும் ஆகிய பாண்டியன் நெடுஞ்செழியன்; கோல்வளை இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு இருநில மடந்தைக்கு செங்கோல் காட்ட - வளையாத தனது செங்கோல் கோவலன் திறத்திலே வளைந்து கோணிய இடத்தை நிமிர்த்துதற் பொருட்டுத் தனது உயிராகிய ஆணியை வழங்கி அப்பொழுதே அதனை நிமிர்த்துப் பெரிய நிலமகளுக்குப் பண்டுபோலச் செங்கோலாக்கிக் காட்டுதற்கு; புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது - குற்றந்தீர்ந்த கற்பினையுடைய பெருந்தேவியோடு தான் வீற்றிருந்த அரியணையின்மீதே உயிர் துறந்தமை அறியமாட்டாமல்; என்க.

(விளக்கம்) ஏவல் தெய்வம்-தீக்கடவுள். எரிமுகம் திறத்தலாவது - தீப்பற்றிக் கொழுந்துவிட்டு ஒளிர்வது. காவல் தெய்வம் - அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் பால்வேறு தெரிந்த வகுப்பினர்க்கும் உரிய நால்வேறு வகைப் பூதங்கள். இனி, இந்திரன், இயமன், வருணன், சோமன் என்பாருமுளர். கடைமுகம் அடைத்தன என்றது, காவாதொழிந்தன என்றவாறு. அரைசர் : போலி. செழியன் தன் செங்கோல் வளைந்த இழுக்கத்திற்குத் தனது உயிராகிய ஆதாரத்தைக் கொடுத்து நிமிர்த்து நிலமகளுக்கு அதனைச் செங்கோலாக்கிக் காட்ட என்க. அவள் புலவாமைப் பொருட்டுக் காட்டியவாறு. மன்னவன் மயங்கி வீழ்தலும் அவன் இணையடி தொழுது வீழ்ந்து வணங்கிய கோப்பெருந்தேவி அவன் அடிவருடி உயிர்நீத்தமை ஈண்டுப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் செழியன் துஞ்சினன் என்பதனால் குறிப்பாகவும் பின்னர்க் காட்சிக்காதையில் (80) தயங்கிணர் ........ (84) மாய்ந்தனள் என வெளிப்படையாகவும் உணர்த்தப்பட்டது. அரைசு கட்டில் - அரியணை. துஞ்சியது - இறந்தது.

அரசியல்சுற்றத்தார் செயல்

8-11: ஆசான் ........... இருப்ப

(இதன்பொருள்.) ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு - ஆசிரியனும் பெரிய காலக் கணிவரும் அறக்களத் தலைவர்களும் திருமந்திர ஓலை எழுதுவோரும் ஆகிய இவரோடு; கோயில் மாக்களும் - அரண்மனை அகப்பரிசாரகரும்; குறுந்தொடி மகளிரும் - கோப்பெருந்தேவியைச் சார்ந்த குறிய தொடி யணிந்த மகளிரும் ஆகிய எல்லாரும்; ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப - திகைப்புற்று ஓவியமாக வரையப் பெற்ற அரசியல் சுற்றத்தாரைப் போல வாய்வாளாது செயலறவு கொண்டிராநிற்ப; என்க.

(விளக்கம்) ஆசான் - மன்னனின் நல்லாசிரியன். பெருங்கணி - கணிவர்தலைவன். (கணிவர் -வானநூல் வல்லுநராய்க் காலத்தைக் கணித்தறிவோர்). காவிதி - காவிதிப் பட்டம் பெற்றவர். இவர் தாழ்விலாச் செல்வர் என்க. வரிஇலார் என்பது அரும்பதவுரை. அறக்களம் - அறங்கூறவையம். ஓவியச் சுற்றம் - அரசன் நாளோ லக்கத்தை ஓவியமாக வரைந்தவிடத்து அதன்கண் ஓவியமாக அமைந்த சுற்றம் போல என்க. இவரெல்லாம் கண்ணகியின் சீற்றத்தையும் மன்னனும் பெருந்தேவியும் மயங்கி வீழ்ந்தமையையும் கண்கூடாகக் கண்டமையால் திகைப்புற்று இங்ஙனமிருந்தனர் என்க.

இதுவுமது

12-15 : காழோர் ............. கொள்ள

(இதன்பொருள்.) காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - பரிக்கோலையுடைய யானைப் பாகரும் குதிரைப் பாகரும் கடிதாகத் தேரினைச் செலுத்தவல்ல தேர்ப்பாகரும் வெற்றி வாய்த்தலையுடைய வாட்படை மறவரும் விரவி மிகுந்து; கோமகன் கோயில் கொற்றவாயில் தீமுகம் கண்டு - அரசனுடைய அரண்மனையினது வெற்றியையுடைய வாயிலின்கண் பற்றி எரியும் தீப்பிழம்பினைக் கண்டு; தாம் மிடை கொள்ள - நிகழ்ச்சி இன்னதென்று அறியாமையால் வேறு காரணத்தால் தீப்பற்றிய தென்று கருதி அதனை அவித்தற்குத் தாமே முற்பட்டு அரண்மனை முன்றிலின்கண் வந்து நெருங்கா நிற்பவும்; என்க.

(விளக்கம்) காழ் - குத்துக்கோல். பரிக்கோல் என்பதுமது. வாதுவர் - குதிரைப்பாகர். வாய்த்த வாள் மறவர் என்க. மனம் மயங்கினர் எனினுமாம். தீமுகம் - தீப்பிழம்பு.

வருண பூதங்கள்

(1) பார்ப்பனப் பூதம்

16-36: நித்தில ............ கடவுளும்

(இதன்பொருள்.) நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிர் ஒளி - முத்தாலியன்ற பசிய பூணினது நிலாப்போன்று திகழ்ந்து விளங்கும் ஒளியினையுடைய; (34) முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் - வேள்விக் கருவியோடு மூன்றுவகை வேள்வித் தீயையும் ஓம்புகின்ற தமக்குரிய வாழ்க்கையினது முறைமையினின்றும் தப்பாத மறைமுதல்வனாகிய நான்முகன் வேள்விக்கென வகுத்துக்கூறிய உறுப்புகளோடு கூடிய; ஆதிப்பூதத்து அதிபதிக்கடவுளும் - முதல் வகுப்புப் பூதங்களாகிய பார்ப்பனப் பூதங்களுக்குத் தலைமையையுடைய பார்ப்பனப் பூதக்கடவுளும் என்க.

(விளக்கம்) ஆதிப் பூதம் - பார்ப்பனப்பூதம். அப் பூதத்தின் நிறம் முத்துப்போன்ற வெண்ணிறம் என்க. வேள்விக் கருவியாவன - சமிதை முதலாயின. வேத முதலோன் - நான்முகன்.

குறிப்பு - இக் காதையுள் (............) இங்ஙனம் பகர வளைவுக்குள் அமைக்கப்பட்ட செய்யுட் பகுதிகள் பல ஏட்டுப்படிகளில் காணப்படவில்லை என்பதனாலும், அரும்பதவுரையாசிரியர் இவற்றிலுள்ள அரும்பதங்களில் ஒன்றற்கேனும் உரை வரையாமையானும், இவையெல்லாம் பொருட்சிறப்பு உடையனவாகக் காணப்படாமையானும் இவை பிற்காலத்தே பிறரால் எழுதி இடையிலே சேர்க்கப்பட்டவை என்று அறிஞர் கருதுவதனால் இவற்றிற்கு யாமும் உரை வரையாது விட்டேம். எஞ்சிய பகுதிக்கே உரை ஈண்டு வரையப்பட்டன.

அரச பூதம்

(37-50: ......... )

53-61: பவள .......... கடவுளும்

(இதன்பொருள்.) பவளச் செஞ்சுடர் திகழ் ஒளி மேனியன் - பவளம்போன்ற சிறந்த கதிர் திகழுகின்ற ஒளியையுடைய திருமேனியை உடையவனும்; ஆழ்கடல் ஞாலம் ஆள்வோன் தன்னின் - ஆழ்ந்த கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தை ஆளுகின்ற முடிமன்னனைப் போல; முரைசொடு வெள்குடை கவரி நெடுங்கொடி உரைசால் அங்குசம் வடிவேல் வடிகயிறு என இவை பிடித்த கையினனாகி - வெற்றிமுரசும் வெண்கொற்றக் குடையும் வெண்சாமரையும் நெடிய கொடியும் புகழ்மைந்த தோட்டியும் வடித்தவேலும் வடிகயிறும் என்னும் இவற்றை உடைய கையினையுடையவனும்; எண் அருஞ் சிறப்பின் மன்னவர ஓட்டி - எண்ணுதற்கரிய சிறப்புடைய அரசர்களைப் போர்களத்திலே புறங்காட்டி ஓடும்படி செய்து; மண் அகங் கொண்டு - நிலவுலகம் முழுவதையும் தன் ஒரு குடை நீழலின்கண் கொண்டு; செங்கோலோச்சி - செங்கோன்மை செலுத்தி, கொடுந்தொழில் கடிந்து - தீவினை நிகழாமல் விலக்கி; கொற்றங் கொண்டு - வெற்றி கொண்டு; நடும்புகழ் வளர்த்து - என்றும் நிலைபெறுமாறு நாட்டப்பெற்ற தனது புகழை மேலும் மேலும் வளர்த்து; நால் நிலம் புரக்கும் - குறிஞ்சி முதலிய நான்கு வகைப்பட்ட நிலங்களையும் காப்பாற்றியதனால்; உரைசால் சிறப்பின் - பெரும் புகழ் அமைந்த சிறப்பினை உடைமையால்; நெடியோன் அன்ன - நெடியோன் என்று பெயர்பூண்ட பாண்டியனை யொத்த; அரைச பூதத்து அருந்திறல் கடவுளும் - அரசர் வகுப்புப் பூதங்களின் தலைவனாகிய வெல்லுதற்கரிய ஆற்றலுடைய அரச பூதமாகிய கடவுளும்; என்க.

(விளக்கம்) இப் பகுதிக்கு (52) ஞாலமாள்வோன் என உவமையாகக் கூறப்பட்டவன் அருச்சுனன் என்பர் அரும்பதவுரையாசிரியர். அங்ஙனங் கூறுதற்கு ஈண்டுக் காரணம் காணப்படவில்லை. வாளாது அரசன் எனலே அமையும். முரசம் முதலிய அரசருக்குரிய பொருளெல்லாம் அரச பூதத்திற்கும் உரிய என்று கொள்க. நெடியோன் என்பதற்கு நெடியோனென்னும் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்று கூறிப் பொலந்தார் மார்பின் நெடியோன் முன்னீர்விழவின் நெடியோன் எனவரும் அவன் பெயர்களை எடுத்துக்காட்டுவர் உயர்திரு நாட்டார் அவர்கள். இவ்வுரையே ஈண்டைக்குப் பொருத்தமாகத் தோன்றுகின்றது. அரும்பதவுரையாசிரியர் நெடியோன் என்பதனை உலகளந்தோன் எனக் கருதுவர்.

வணிக பூதம்

62-88 : செந்நிற ...... கடவுளும்

(இதன்பொருள்.) செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன் - சிவந்த நிறமுடைய புதிய பொன்போன்ற திருமேனியையுடையவனும்; மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசுமுடி ஒழிய அமைத்த பூணினன் - நிலைபெற்ற சிறப்பினையுடைய மறப்பண்புடைய வேலேந்திய அரசர்களுக்குரிய கோமுடியாகிய அணிகலன் ஒழிய ஏனைய அணிகலம் முழுவதையும் அணிந்தவனும்; வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி- வாணிகர்க்குரிய வணிகத் தொழிலாலே நெடிய இந்நிலவுலகத்தைப் பாதுகாத்து; நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் - கலப்பையினையும் துலாக் கோலையும் ஏந்திய கையினையுடையவனும்; (உரைசால் (67) ......... அளித்தாங்கு (84) .............. ) உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக் கிழவோன் என்போன் - உழவுத்தொழிலாலே நெல் முதலிய கூலங்களை விளைவித்து உலகில் உள்ள மக்களுக்கு உதவுகின்ற குற்றமற்ற வாழ்க்கைக்கு உரியோன் என்று கூறப்படுபவனும்; கிளர் ஒளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறைவன் வடிவின் - மிகுகின்ற ஒளியினையுடைய தலையின் கண் இளைய பிறைத்திங்களைச் சூடியருளிய இறைவனுடைய வடிவுபோன்ற வடிவத்தையுடையவனும் ஆகிய; ஓர் விளங்கு ஒளிப்பூத வியன்பெருங் கடவுளும் - விளங்குகின்ற ஒளியையுடைய வணிக பூதங்களுக்கு மாபெருந் தலைவனாகிய வணிகபூதமாகிய கடவுளும்; என்க.

(விளக்கம்) அரசர்க்குரிய முடிக்கலன் ஒழிந்த அணிகலன்களும் படைக்கலன்களும் வணிகருக்கும் உள என்பதனை வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய எனவரும் தொல்காப்பியத்தானும் (பொருளதி - 638) உணர்க.

இனி, வணிகருக்கு உழவும் உரியது என்பதனை, மெய்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பா லான எனவரும் தொல்காப்பியத் தானும் (பொருளதி - 633) உணர்க.

செந்நிறப் பசும்பொன் முதலாக வியன்பெருங் கடவுள் ஈறாக வணிக பூதத்தைக் கூறிற்று என்பர் அரும்பத வுரையாசிரியர்.

வேளாண் பூதம்

(89-96: ............... )

97-102: மண்ணுறு .......... தானுந் தோன்றி

(இதன்பொருள்.) மண்ணுறு திருமணி புரையு மேனியன் - கழுவிய நீலமணி போலும் திருமேனியை யுடையவனும்; ஒள் காழக நிறம் சேர்ந்த உடையினன் - ஒளியுடைய கரிய நிறம் பொருந்திய உடையை யுடையவனும்; ஆடற்கு அமைந்த அவற்றொடுபொருந்தி - வேளாண் வாகை சூடுதற்கு வேண்டிய அக்கருவிகளோடு பொருந்தி; பாடற்கு அமைந்த பலதுறை போகி - களம்பாடுவோர் புகழ்ந்து பாடுதற்குரிய பல்வேறு அறத்துறைகளிலும் கடைபோகச் சென்றவனும் ஆகிய; கலிகெழு கூடற் பலிபெறு பூதத்தலைவன் என்போன் தானும் - ஆரவாரமுடைய அம் மதுரை நகரத்திருந்து வேளாண்மாந்தர் இடுகின்ற பலிப்பொருளைப் பெறுகின்ற வேளாண் பூதங்களுக்குத் தலைவன் என்று கூறப்படுகின்றவன் ஆகிய வேளாண்பூதமும் ஆகிய இப்பால் வேறுபட்ட நால்வேறு பூதங்களும்; தோன்றி - வெளிப்பட்டு என்க.

(விளக்கம்) ஆடல் - வெல்லுதல். எனவே வேளாண் வாகை என்பதாயிற்று. அஃதாவது:

மூவரும் நெஞ்சமர முற்றி அவரவர்
ஏவல் எதிர்கொண்டு மீண்டுரையான் - ஏவல்
வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவான் உலகுக் குயிர்

என்று வருகின்ற புறப்பொருள் வெண்பா வாலறிக.

அதற்கு அமைந்த பொருள் வித்தும் ஏரும் நிலமும் பிறவும் எனக்கொள்க. பாடல் என்றது, அவர்தம் ஈதல் முதலிய பல அறத்துறைகளையும் பற்றிப் பாடுதல். பாடுதற்கு அமையும்படி அத்துறையில் சிறத்தல் என்க.

இனி, ஆடற்கமைந்தவை வாச்சியங்கள் எனவும் பாடற்கமைந்தவை அவற்றின் பலதுறைகள் எனவும் கூறுவாருமுளர். அங்ஙனங் கூறுவார்க்கு வேளாண்பூதம் என்றல் சாலாது என்க.

மண்ணுறு திருமணி முதலாகப் பலி பெறுபூதத் தலைவன் ஈறாக வேளாண்பூதத்தைக் கூறிற்று. எனவே அவருங் கூறுவர்.

பூதங்க ளந்நகரத்தினின்றும் புறப்படல்

103 - 108: கோமுறை .......... பெயர

(இதன்பொருள்.) கோமுறை பிழைத்த நாளில் இந்நகர் - நம் மன்னன் செங்கோன்மையில் இழுக்கிய நாளிலே இக் கூடல்மா நகரத்தை; தீமுறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது - தீயானது உண்ணும் முறையால் உண்பதற்குரிய தன்மையும் உளதென்பது; ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் - யாம் அறிந்து கொள்ளலாகும் முறைமையாலே அறிந்துள்ளேம் ஆதலால்; யாம் போவது முறை இயல்பன்றோ - அதற்கேற்ப யாம் நம் காவல் கைவிட்டுப் போவது இயற்கையே யன்றோ; என - என்று தம்முள் உடன்பட்டு; கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் - தனது கொங்கையாலே நகரத்தை எரியூட்டக் கருதிய வெற்றியையுடைய கண்ணகி கண்முன்னரே; நால்பால் பூதமும் பால்பால் பெயர-முற்கூறப்பட்ட பார்ப்பனர் வகுப்பு முதலிய நான்கு வகுப்பிற்குமுரிய நால்வேறு பூதங்களும் நகர்காவல் கைவிட்டுத் தத்தமக்கேற்ற இடங்களுக்குச் செல்லாநிற்ப; என்க.

(விளக்கம்) கோ - அரசன். தீயானது அறவோரிடத்தைக் கை விட்டு அல்லாதாரிடங்களை உண்ணுமுறை பற்றி உண்ண என்றவாறு. தெய்வங்களாகிய யாம் எதிர்கால நிகழ்ச்சியையும் அறியக்கூடும் என்பது கருதி ஆமுறையாக அறிந்தனம் என்றவாறு. ஊழ் வினைக்கேற்ப ஒழுகுவது தெய்வங்களுக் கியல்பாதலின் நாம் போவது இயல்பே அன்றோ என்று அப்பூதங்கள் துணிந்தன என்க.

மதுரையின் கலக்கம்

109-112: கூலமறுகு ....... கலங்க

(இதன்பொருள்.) கூலமறுகும் கொடித்தேர் வீதியும் - கூலக் கடைத் தெருவும் கொடியையுடைய தேர் ஓடுகின்ற தெருவும்; பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - கூறுகூறாக வேற்றுமைப்பட்டுத் தெரிந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு வேறுபட்ட மக்கள் வாழுகின்ற தெருவும்; (உரக்குரங்கு உயர்த்த ஒண் சிலை உரவோன் - வலிய குரங்காகிய அநுமக்கொடியை உயர்த்த ஒள்ளிய காண்டிபம் என்னும் வில்லினையுடைய வலியோனாகிய அருச்சுனன்:) கா எரியூட்டிய நாள்போல் கலங்க - காண்டாவனத்தைத் தீ யுண்ணச்செய்த நாளிலே அவ் வனத்தில் வாழ்ந்த உயிரினங்கள் கலங்கினாற்போலக் கலங்காநிற்ப; என்க.

(விளக்கம்) கூலம் - நெல் முதலிய எண்வகைக் கூலங்கள். தேர் வீதி என்றது, அரண்மனை வீதியை. உரக்குரங்கு என்னும் (111) அடி இடைச் செருகல் என்பாருமுளர். எனினும் கா என்றது காண்டாவனத்தையே ஆதலின் அவ்வடி பொருத்தமாகவே தோன்றுகின்றது. மேற்கூறிய தெருவில் வாழும் அறவோரல்லாத தீயோர் மட்டுமே தீயினால் கலங்கினர் என்பது கருத்தாகக் கொள்க.

இதுவுமது

113-118: அறவோர் .............. பெயர்ந்தன

(இதன்பொருள்.) அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது - மேற்கூறிய தெருவிடத்தும் பிறவிடங்களினும் அறவோர் வாழும் இடங்களில் அத் தீயானது தன் கொழுந்தினைப் போக்காமல்; மறவோர் சேரி மயங்கு எரி மண்ட - தீவினையாளர் சேர்ந்த இடங்களிலெல்லாம் அறிவு மயங்குதற்குக் காரணமான தீ மிக்கெரியா நிற்ப; கறவையும் கன்றும் கனல் எரி சேரா அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன - ஆக்களும் அவற்றின் கன்றுகளும் கனலுகின்ற எரியினால் துன்பப்படாமல் அறப்பண்புமிக்க இடையர்கள் வாழுகின்ற அகன்ற தெருக்களை எய்தின; மறவெம் களிறும் மடப்பிடி நிரைகளும் விரைபரிக் குதிரையும் மதிற்புறம் பெயர்ந்தன- தறுகண்மையுடைய வெவ்விய களிற்றியானைகளும் இளைய பிடியானைக் கூட்டங்களும் விரைந்து பாயும் குதிரைகளும் தீயினால் ஊறுபடாவண்ணம் மதில் அரணுக்குப் புறத்தேபோய் உய்ந்தன; என்க.

(விளக்கம்) கண்ணகியார் பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர் எனும் இவரைக் கைவிட்டு என்றொழியாது மீண்டும் தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று பணித்தமையால் தீமையற்ற களிறும் பிடியும் குதிரையும் இன்னோரன்ன பிறவும் உய்ந்தன எனக் கொள்க. கறவை - ஆ. அறவை - அறப்பண்பு.

இளமகளிர் செயல்

119 - 127 : சாந்தம் ......... மயங்க

(இதன்பொருள்.) சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை - சந்தனம் திமிர்ந்த அணந்த இளைய அழகிய கொங்கையினையும்; மைத்தடங் கண்ணார் - மை எழுதப்பட்ட பெரிய விழிகளையுமுடைய இளமகளிர்; மைந்தர் தம்முடன் - தத்தம் காதலரோடே; செப்புவாய் அவிழ்ந்த தேம்பொதி நறுமலர் அவிழ்ந்த நாறு இருமுச்சி - செப்பின்கண் இடப்பட்ட நாளரும்புகள் விரிந்த தேன் பொதுளிய நறிய மணம் பொருந்திய புதிய மலர்களினின்றும் பரவிய மணம் கமழுகின்ற கரிய தமது கூந்தலின்கண்; துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள் - செறியக்கட்டிய மலர்மாலைகள் உகுத்த பூந்தாதும்; குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் - குங்குமத்தால் கோலமெழுதப் பட்ட தமது முலைமுற்றத்தின்கண்; பைங்காழ் ஆரம் பரிந்தன  பரந்த பசிய வடத்தின் முத்துக்களும் ஊடலால் அறுக்கப்பட்டு உதிர்ந்து பரவிக் கிடக்கின்ற; தூமெல் சேக்கை - தூய மெல்லிய மலர்ப்பாயலின்கண்; துனிப்பதம் பாரா காமக் கள்ளாட்டு அடங்கினர் மயங்க - தம்முடைய ஊடல் தீர்தற்குச் செவ்வி நோக்கி அச் செவ்வி பெற்றுக் காமமாகிய களியாட்டம் ஆடுதற்கு இடம் பெறாது அடங்கித் தீயினால் மயங்கா நிற்பவும்; என்க.

(விளக்கம்) இளமகளிர் - தம் கணவருடன் கலவிசெய்து ஊடிப் பின்னர் அவர் ஊடல் தீர்க்குங்கால் அது தீர்தற்குச் செவ்வி தேர்ந்து இருந்தவர், தம் பள்ளியிலே தீப்பரவியதனாலே அச்செவ்வி பெறாமல் காமக் களியாட்டத்தைக் கைவிட்டுத் தீ முகங்கண்டு அஞ்சி அடங்கி மயங்கினர் என்றவாறு.

தாய்மைப் பருவத்து மகளிர்செயல்

128-131: திதலை ...... போத

(இதன்பொருள்.) திதலை அல்குல் தேம் கமழ் குழலியர் - தேமல் படர்ந்த அல்குலினையும் இனிய மணங்கமழும் கூந்தலினையுமுடைய தாய்மைப் பருவத்து மகளிர்கள்; குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு - மழலைமொழி பேசுகின்ற சிவந்த வாயினையும் குறுகுறு நடக்கும் நடையினையுமுடைய தத்தம் மகார்களை; பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி - பஞ்சு நிரைத்த அணையாகிய படுக்கையில் துயிலுகின்ற துயிலினின்றும் எழுப்பி; வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத - வெள்ளிய நரையினையுடைய கூந்தலையுடைய முதிய மகளிரோடு தீயினால் ஊறு சிறிதுமின்றிப் புறம்போகா நிற்பவும்; என்க.

(விளக்கம்) குழலியர் என்றது மகப்பெற்று வளர்க்கும் அரிவை தெரிவைப் பருவத்து மகளிர்களை. குதலை - மழலைச்சொல். வால்நரைக் கூந்தல் மகளிர் என்றது தம் மாமியும் செவிலித் தாயரும் பிறரும் ஆகிய முதுமகளிரை - இவரெல்லாம் தீயால் கைவிடப்பட்ட அறவோரல்லாத மகளிர். இல்லம் தீப்பற்றி எரிதலாலே இங்ஙனம் போயினர் என்க.

அறவோராகிய பெருமனைக் கிழத்தியர் செயல்

132 - 137 : வருவிருந்து ........ ஏத்தினர்

(இதன்பொருள்.) வருவிருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி - தம் மனைக்கு வருகின்ற விருந்தினரை முகமலர்ந்து வரவேற்று இன்சொற் கூறிஉண்டி உடை முதலியன வழங்கிப் பாதுகாக்கின்ற அறம் முதலிய இல்லின்கண் இருந்து செய்யும் அறங்களில் வழுவாத பெரிய இல்லத்துத் தலைவிமாராகிய கற்புடை மகளிர் கண்ணகியின் வெற்றி கண்டு பெரிதும் மகிழ்ச்சியை அடைந்து; இலங்கு பூண் மார்பின் கணவனை யிழந்து சிலம்பின் வென்ற சேயிழை நங்கை - விளங்குகின்ற அணிகலனணிந்த மார்பினையுடைய கணவனை இழந்த அவ்விழப்பிற்குக் காரணமான பாண்டிய மன்னனைத் தமது சிலம்பினால் வென்ற சிறந்த அணிகலன்களையுடைய மகளிர்களுள் தலைசிறந்த கண்ணகியார்; கொங்கைப் பூசல் கொடிதோ அன்று என - தமது கொங்கையால் செய்த இக்கலாம் கொடியதொன்றன்று! இதுதானும் தம்மினத்து மகளிர்க் கெல்லாம் ஏற்றம் தருமொரு நற்செயலே என்று கூறி; பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் - சினந்து எரிகின்ற தீக் கடவுளைக் கைகுவித்துத் தொழுது வாழ்த்துவாராயினர்; என்க.

(விளக்கம்) மனையின்கண் இருந்து செய்யும் அறங்களுள் தலைசிறந்தது விருந்தோம்பும் அறம் ஆதல்பற்றி அதனை விதந்து ஏனையவற்றை மனையறம் என்பதனால் அடக்கினர். அவ்வறங்கள் அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் வருந்தி வந்தோர்க் கீதலும் இன்னோரன்ன பிறவுமாம், என்க. இவ்வறமெலாம் மூட்டாது செய்தற்கியன்ற திருவுடைமை தோன்றப் பெருமனைக்கிழத்தியர் என்றார். கண்ணகியாரின் வெற்றியும் அவர்தம் கொங்கைப் பூசலும் உலகுள்ள துணையும் கற்புடை மகளிரின் சிறப்பிற்குத் தீராத பெருஞ்சான்றாக நின்று நிலவும் என்பது குறித்துப் பெருமகிழ் வெய்தினர் என்பது கருத்து. கற்புடை மகளிர்க்கு உதவியாக அவர் ஏவியபடி ஒழுகுதல் குறித்துத் தீக்கடவுளையும் தொழுதனர் என்க.

நாடக மகளிர் செயல்

138-146: எண்ணான்கு ............. என்ன

(இதன்பொருள்.) எண்ணாண்கு இரட்டி இருங்கலை பயின்ற பண்இயல் மடந்தையர் பயம் கெழு வீதி - அறுபத்து நான்கு பெரிய கலைகளையும் கற்றுத் துறைபோகியவரும் பண்ணுக்கேற்ப விறல் பட நடிப்பவருமாகிய கணிகை மகளிர் வாழுகின்ற கலையினது பயன் பொருந்திய தெருவின்கண்; தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் பண்ணுக்கிளை பயிரும் பண் யாழ்ப் பாணியொடு நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து - தண்ணுமையும் முழவமும் இசை தாழ்ந்து முரலுகின்ற இனிய வேய்ந் குழலும் பண்ணும் அவற்றின் திறங்களும் இசைக்கின்ற பண்ணுறுத்தப்பட்ட யாழ்ப் பாடலோடு நடிக்கின்ற அந்நாடக மடந்தையர் தாம் கூத்தாடுகின்ற அரங்குகளையும் தீப்பற்றி எரித்தலாலே அவற்றை இழந்தவராய்ப் புறம்போந்து வீதியிடத்தே வந்து, கண்ணகியாரைக் கண்டு அந்தோ! எந்நாட்டாள் கொல் யார் மகள் கொல்லோ - இவள் எந்த நாட்டில் பிறந்தவளோ யாருடைய மகளோ; இந்நாட்டு இவ்வூர் இறைவனை இழந்து - இந்தப் பாண்டிய நாட்டின்கண் வந்து இம்மதுரை மூதூரின்கண் தன் கணவனையும் இழந்து; தோர மன்னனைச் சிலம்பின் வென்று - ஆராய்ச்சி இல்லாமல் செங்கோன் முறைமை பிழைத்த பாண்டிய மன்னனைத் தனது சிலம்பினாலேயே வென்று; இவ்வூர் தீ ஊட்டிய ஒரு மகள் என்ன - இப் பேரூரை இவ்வாறு தீக்கிரையாக்கிய ஒப்பற்ற இக் கற்புடைமகள்! என்று கண்ணகியார்க்கு இரங்கா நிற்ப என்க.

(விளக்கம்) கலைபயின்ற மடந்தையருடைய வீதியின்கண் தண்ணுமை முதலிய கருவிகளோடு ஆடு அரங்கையும் அந்நாடக மடந்தையர் இழந்து புறம்போந்து ஆங்குக் கண்ணகியைக் கண்ணுற்று இவ்வொரு மகள் எந்நாட்டாள் கொல் யார்மகள் கொல் என்று இரங்காநிற்ப என்று இயைத்துக் கொள்க.

கண்ணகியின் நிலைமையும், அவள் முன் மதுராபதி என்னும் தெய்வம் வந்து தோன்றுதலும்

147-157: அந்திவிழவும் ........ மதுராபதியென்

(இதன்பொருள்.) அந்திவிழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலும் தெய்வம் பரவலும் - நாள்தோறும் நிகழ்கின்ற மாலைக் காலத்துத் திருவிழாக்களும் வேதம் ஓதும் முழக்கமும் செந்தீயின்கண் அவிசொரிந்து பெய்யும் வேள்வியும் திருக்கோயில் தோறும் மக்கள் சென்று தெய்வத்திற்குச் செய்யும் வழிபாடுகளும்; மனை விளக்கு உறுத்தலும் மாலை அயர்தலும் - மனைகள் தோறும் மகளிர் நெல்லும் மலரும் தூவித் திருவிளக் கேற்றுதலும் மாலைப் பொழுதில் விளையாட்டயர்தலும்; வழங்கு குரல் முரசமும்; வழக்கமாக மாலைக் காலத்தே முழங்குகின்ற முரச முழக்கமும்; மடிந்த மாநகர் - இல்லையான அந்தப் பெரிய நகரத்தின்கண்; காதலன் கெடுத்த நோயொடு - தன் கணவனை இழந்தமையால் உண்டான பெருந் துன்பமாகிய தீயினால்; உளம் கனன்று ஊதுஉலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து - நெஞ்சம் வெதும்பி ஊதுகின்ற கொல்லனது உலையினிடத்துத் துருத்தியைப் போல வெய்தாக நெடுமூச் செறிந்து; மறுகிடை மறுகும் கவலையில் கவலும் நெடுந் தெருக்களிடத்தே சுழன்று திரிவாள் குறுந்தெருக்களிடத்தே கவலையுற்றுத் திகைத்து நிற்பாள்; இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் - பின்னர்ச் செல்லுதலும் செய்வாள், சென்றவிடத்தே யாதொன்றும் தோன்றாமல் நின்று மயங்குதலும் செய்வாள்; இவ்வாறாக; ஆர் அஞர் உற்ற வீரபத்தினி முன் - பொறுத்தற்கரிய துன்பமெய்திய சீறிய பத்தினியாகிய அக் கண்ணகியின் முன்; கொந்து அழல் வெம்மைக் கூர்எரி பொறாஅள் - அம் மாநகரத்தின்கண் கொத்துக் கொத்தாய்ப் பற்றி எரிகின்ற தழலினது வெப்பத்தையுடைய மிக்க நெருப்பினைக் கண்டு நெஞ்சம் பொறுக்க கில்லாளாய்; மதுராபதி வந்து தோற்றினள் - மதுராபதி என்னும் அந்நகரத்துக் காவல் தெய்வம் உருவங் கொண்டு வந்து தோன்றுவாளாயினள்; என்க.

(விளக்கம்) அந்திவீழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலும் தெய்வம் பரவலும் மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும் முரசம் முழங்குதலும் அந்நகரத்தே நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சிகள். அவையெல்லாம் அற்றை நாள் நிகழா தொழிந்தன என்றவாறு. ஆரணம் - வேதம். வேட்டல் - வேள்வி செய்தல். விளக்குறுத்தல் - திருவிளக்கேற்றுதல். மாலை அயர்தல் - மாலைப்பொழுதில் விளையாடுதல். முரசம் வழங்கு குரலும் என மாறுக. குருகு - துருத்தி. உயிர்த்தனள் உயிர்த்து - உயிர்த்தனளாய் உயிர்த்து என்க. கவலை - சந்திகளுமாம். கவலுதல் - துன்பத்தால் திகைத்தல். இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் என்பன அவற்றின் மிகுதி தோற்றுவித்தன. சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும் என்பது மணிமேகலை; (மணி -3; 111-2.) கொந்து - கொத்து. வெம்மையையுடைய எரியைப் பொறாதவளாய் என்க. காவல் தெய்வம் ஆதலின் அந்நகரம் தீப்பற்றி எரிதலைப் பொறுக்கமாட்டாளாய் அதற்குத் தீர்வு காணவேண்டி வீரபத்தினி முன் வந்து தோன்றினள் என்பது கருத்து. 

வெண்பா

மாமகளும் ......... மாது

(இதன்பொருள்.) நாம் முதிராமுலை குறைத்தாள் முன்னர் - அச்சத்தைச் செய்கின்ற இளமையையுடைய தனது கொங்கையில் ஒன்றனைத் திருகி எறிந்த அவ் வீரபத்தினி முன்னர்; மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்று உகந்த கோமகளும் - திருமகளும் நாமகளும் கரிய மயிடன் என்னும் அசுரனைக் கொன்று மறத்தாலே உயர்ந்த தலைமை சான்ற கொற்றவையும் ஆகிய இந்த மூன்று இறைவிமாரும்; படைத்த கொற்றத்தாள் - எய்தியுள்ள வெற்றி முழுவதும் தானே படைத்துள்ள; மதுராபதி என்னும் மாது வந்தாள் - மதுராபதி என்னும் தெய்வ மடந்தை துணிவோடு வந்தனள் என்க.

(விளக்கம்) மாமகள் - திருமகள். மாமயிடன் என்புழி, மா - கருமை. மகிஷன் என்பது மயிடன் என வந்தது. எருமை உருவம் உடையன் ஆதலின் இவன் மகிடா சுரன் எனப்பட்டான். வீரபத்தினி முன் வருவதற்கு வேண்டும் துணிவுடையாள் இம்மதுராபதி என்றுணர்த்தற்குத் திருமகள் முதலிய மூவருடைய வெற்றியையும் ஒரு சேர உடையாள் இவள் என்றார். எனவே, இவள் இறைவனுடைய ஒரு பாகத்தே யமைந்த இறைவியே ஆதல் பெற்றாம். அடுத்துவரும் காதையின் தொடக்கத்தே அடிகளார் இம் மதுராபதியை வண்ணிக்கு மாற்றாலும் அது விளங்கும்.

அழற்படு காதை முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar