திருமாலின் அடியவரான குலசேகராழ்வாரின் பாடல்கள், திருப்பதி மீது அவருக்கு இருந்த பக்தியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. பாடல் ஒன்றில் திருப்பதி குளத்தில் நாரையாகப் பிறக்க வேண்டும் என வேண்டுகிறார். நாரை இரை தேடி திருப்பதியை விட்டு எங்காவது செல்லும் என்பதால், அடுத்த பாடலில் மீனாகப் பிறவி தர வேண்டுகிறார். ஏனென்றால் மீன் குளத்தை விட்டு வெளியே போகாது அல்லவா? அதுவும் விரைவில் மாறி விடுகிறது. யாராவது மீனைப் பிடித்தால் என்ன செய்வது என்ற கேள்வி வருகிறது. இப்படியே ஏழுமலையானுக்கு ஏவல் செய்யும் பணியாள், செண்பக மரம், புதர், பாறை, காட்டாறு, கோவிந்தா நாமம் பாடும் அடியாராக இருக்க ஆசைப்படுகிறார். பெருமாளை எப்போதும் தரிசிக்கும் ஆசையில் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்கிறார். கடைசிப் பாடலில், திருவேங்கடப் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே என்று பெருமாளின் மனசு போல ஏதாவது ஒன்றாகப் பிறந்தால் போதும் என முடிக்கிறார் ஆழ்வார்.