தேவாரம் சஞ்சீவி பெருமாள் மலைக்கோயிலில் புரட்டாசி சனிவார திருவிழா இன்று (செப்., 22ல்) துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2018 11:09
தேவாரம்:மூலிகை காற்று தழுவிச் செல்லும் கோடைக்கும் வற்றாத நீர் சுனை உள்ள கோம்பை சாலைமலை சஞ்சீவி பெருமாள் மலைக்கோயிலில் புரட்டாசி சனிவாரத் திருவிழா இன்று (செப்.,22ல்) துவங்குகிறது.
கோம்பையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சாலைமலை என்ற சஞ்சீவி மலை. இங்குள்ள சஞ்சீவி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிவாரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும். புண்ணிய மாதமாக கருதப்படும் புரட்டாசியில் மலைமேலுள்ள பெருமாள் கோயிலுக்கு செல்வது சிறப்பு என்ற ஆன்மி நம்பிக்கை உள்ளதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருவர். காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடை திறந்திருக்கும். மதியம் அன்னதானம் வழங்கப்படும்.
மூலிகை மலை மலையடிவார அனுமன் கோயில் பூசாரி தங்கையா கூறுகையில்,எண்ணிய காரியங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி தரும் புண்ணிய தலமாக பெருமாள் கோயில் உள்ளது. பருவமழை துவங்குமுன் சாலைமலையில் மேகம் கருக்கூடினால் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை இதுவரை பொய்த்ததில்லை. இந்த மலையில் ஏராளமான பச்சிலை மூலிகைகள் உள்ளன. இதன் மீது பட்டு வரும் காற்று நம்மை உரசி செல்லும் போது மனமும், உடலும் புத்துணர்வு பெறும், என்றார்.
ஜகஜால மலை
பரம்பரை மலைக்கோயில் பூசாரி விவேகானந்தன் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் சனியன்று கோயில் நடை திறக்கப்படும். திருக்கார்த்திகையன்று நடை திறக்கப்படும். புரட்டாசி 5வது சனிவாரத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்கும் அன்னதானம் நடக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்ற போது, இந்த மலையை சரியாக அளவு செய்ய முடியவில்லை. பலமுறை முயன்றும் முடியாததால், ஜகஜால மலை என்று பட்டப்பெயர் சூட்டப்பட்ட பெருமை பெற்றது, என்றார்.
செல்வது எப்படி: சின்னமனூர் அருகே புலிக்குத்தியிலிருந்து 3 கி.மீ., தூரத்தில் மலைக் கோயில் அமைந்துள்ளது. வாகனங்களை மலையடிவாரத்தில் நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டும்.