பதிவு செய்த நாள்
26
செப்
2018
01:09
மேலுார்:மேலுார் அருகே வெள்ளலுார் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. இன்று(செப்.,26) தேரோட்டம் நடக்கிறது.
இத்திருவிழாவையொட்டி 60 கிராமங்களை சேர்ந்த ஏழு குழந்தைகளை அம்மனாக பாவிக்க செப்.,11ல் தேர்வு செய்யப்பட்டு வெள்ளலுார் கோயில் குடியிருப்பு வீட்டில் 15 நாட்கள் தங்கியிருந்தனர். நேற்று குடியிருப்பு வீட்டில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் கோவில்பட்டி ஏழை காத்தம்மன் கோயிலுக்கு ஏழு குழந்தைகள் மாலை மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியின்றி வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் கிடைக்க பெற்றவர்கள் ஏழைகாத்தம்மன் சிலை ஏந்தியும், பூக்கூடையை சுமந்து சென்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று தேரோட்டம், நாளை மஞ்சள் நீராட்டு, அக்.,2ல் கோயில் முன் உள்ள குளத்தில் பெரிய மது கரைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏ.டி.எஸ்.பி., வனிதா, டி.எஸ்.பி., சக்கரவர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.