பதிவு செய்த நாள்
01
அக்
2018
12:10
ஆர்.கே.பேட்டை: புரட்டாசி மாத கிருத்திகையை ஒட்டி, நெல்லிக்குன்றத்தில், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு உற்சவம் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலை மீது அமைந்துள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில். புரட்டாசி மாத கிருத்திகையை ஒட்டி, நேற்று முன்தினம் சிறப்பு உற்சவம் நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு, உற்சவர் மற்றும் மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, மலைக்கோவில் வளாகத்தில் சுவாமி உள் புறப்பாடு எழுந்தருளினார். ‘வள்ளி மணவாளனுக்கு அரோகரா...’ என்ற கோஷத்துடன், பக்தர்கள் வலம் வந்தனர். இதே போல், அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில், பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி கோவில், நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவில்களிலும், கிருத்திகை திருவிழா கோலாகலமாக நடந்தது.