அடர்ந்திருந்த மரக்கிளையில் அமர்ந்து, ஜோடி புறாக்கள் எழுப்பிய சத்தம் ரம்மியமாக இருந்தது. அப்போது திடீரென சருகுகள் சத்தமிட, யாரோ வருவதை உணர்ந்த புறாக்கள் திடுக்கிட்டன. அவை சுதாரிப்பதற்குள் சட்டென மரத்திற்குப் பின்னால் மறைந்தான் ஒரு வேடன். புறாக்கள் மீண்டும் இயல்பானதும், வேடன் அவற்றை துப்பாக்கியால் குறி வைத்தான். காதலில் தோய்ந்த புறாக்கள் உடலோடு உடல் உரசிக் கொண்டு நின்றன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என நினைத்து குறி வைத்தான் அவன். ஏதுவாக புறாக்களும் அசையவில்லை. துப்பாக்கியில் விரலை அழுத்த குண்டு பாய்ந்தது. பொத்தென்று புறா விழும் சத்தம் கேட்டது. குஷியான வேடனும் புறா விழுந்த இடத்தை நெருங்கினான். சிறு அதிர்ச்சியுடன் மேலே நிமிர்ந்து பார்த்தான். அங்கே ஆண்புறா கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தது. அதன் முகத்தில் ரத்தத்துளிகள் தெறித்திருந்தன. ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் இணையை உற்றுப் பார்த்து காடே அதிரக் கத்தியது. வேடன் மிரட்சியுடன் சற்று நகர்ந்து அண்ணாந்து பார்த்தான்.
கீழே வந்த ஆண்புறா தன் இணையை ஓரிருமுறை சுற்றி வந்தது. சட்டென உயரப் பறந்து விரித்த சிறகுகளை மூடிக்கொண்டது. வேகமாக கீழே வந்து பொத்தென விழுந்தது. உடலில் இருந்து ரத்தம் பீய்ச்சியடிக்க உயிரை விட்டது. புறாக்களின் மீது இலைகளை உதிர்த்து மரமும் அஞ்சலி செய்தது. இதைக் கண்கொட்டாமல் பார்த்த வேடனின் கண் கலங்கியது. விரல்கள் தளர்ந்து போகவே துப்பாக்கியும் நழுவியது. அவன் கால்கள் மண்டியிட்டன. துக்கம் தொண்டையை அடைக்க கதறி அழுதான். மண்டியிட்டபடி நகர்ந்து வந்து புறாக்களைத் தொட்டான். அவற்றின் ரத்தம் சுட்டது. இரண்டையும் சுட்டுக் கொன்றிருந்தால், இந்நேரம் அவற்றை சுட்டுத் தின்றிருப்பான். ஆனால் ஒருபுறா இன்னொன்றின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திய விதம் கண்டு உருகிப் போனான். அன்பால் இணைந்தது இந்த உலகம் என்பதை உணர்ந்த வேடன் ’அன்புக்கு அடிமையாகி விட்டேன்; இனி உயிர்களை கொல்ல மாட்டேன்’ என சத்தியம் செய்து விட்டு எழுந்தான்.