அக்.10ல், நவராத்திரி ஆரம்பமாகிறது. இதையொட்டி கொலு வைக்க தயாராகி இருப்பீர்கள். நவராத்திரி வந்தால் வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால் ஏன் கொலு வைக்க வேண்டும்? தேவி ஆதிபராசக்தி பூவுலகம் முழுவதும் ஆட்சி செய்கிறாள். ’யாதுமாகி நின்றாய் காளி’ என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக இருப்பவள் அவளே. எனவே அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். கொலுவிற்கு ’சிவை ஜோடிப்பு’ என்றும் பெயருண்டு. ’சிவை’ என்றால் ’சக்தி’. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.