பதிவு செய்த நாள்
17
அக்
2018
10:10
திருநெல்வேலி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் மகாபுஷ்கர விழா நடந்துவரும் நிலையில் தாமிரபரணியில் நீர்வரத்தை அதிகாரிகள் வேண்டுமென்றே குறைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் கோபமடைந்துள்ளனர்.குருபெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணியில் கடந்த 11ம் தேதி துவங்கி வரும் 23ம் தேதி வரை மகாபுஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.
தாமிரபரணி துவங்கும் பாபநாசம் துவங்கி பல்வேறு தீர்த்தக்கட்டங்களிலும், படித்துறைகளிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. விழாவிற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளனர்.ஆன்மிக அமைப்புகள்விழாவை நெல்லை மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் ஆரம்பத்தில் இருந்தே கண்டுகொள்ளவில்லை.போலீஸ் பாதுகாப்பு, பக்தர்களுக்கு தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற அனைத்தும் அகில இந்திய துறவியர்கள் சங்கம், சிருங்கேரி மடம், காஞ்சி மடம், தாமிரபரணி புஷ்கர விழா குழு உள்ளிட்ட ஆன்மிக அமைப்புகள் உள்ளூர் தன்னார்வலர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.பாபநாசத்தில் கவர்னர் பங்கேற்ற புஷ்கர துவக்க விழாவிற்கு வந்த நெல்லை கலெக்டர் ஷில்பா, அந்த நிகழ்ச்சியில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாரே தவிர விழாவில் ஆர்வம் காட்டவில்லை. அதன் பின்னரும் எந்த படித்துறையையும் அவர் பார்வையிடவில்லை.கடந்த ஒரு வாரமாக நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் மழையில்லை. இதனால் தாமிரபரணியில் தண்ணீர் மிக குறைந்த அளவே செல்கிறது.பக்தர்கள் நீராடுவதற்கு சிரமப்படுகின்றனர்.தண்ணீர் குறைப்பு143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் தற்போது 106 அடி தண்ணீர் உள்ளது.
சில தினங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தற்போது திறந்து விடும் தண்ணீரின் அளவையும் மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே குறைந்துவிட்டது.நேற்று முன்தினம் வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் திறந்த பொதுப்பணித்துறையினர் நேற்று அதனை 600 கனஅடியாக குறைந்துள்ளனர். இதனால் படித்துறைகளில் தண்ணீர் ஓட்டமின்றி பழையநீரிலேயே நீராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.புறக்கணித்த கலெக்டர், அமைச்சர் புஷ்கர விழா மூலம் நெல்லை, துாத்துக்குடி மாவட்ட வருமானம் அதிகரித்துள்ளது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் ஆகியோர் புஷ்கரத்தில் பங்கேற்றுள்ளனர். ஆனால் நெல்லை கலெக்டர் ஷில்பா, மாவட்ட அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் இதுவரை புஷ்கரம் நடக்கும் எந்த படித்துறைக்கும் செல்லவில்லை. ஆனால் துாத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்துாரி, முறப்பநாடு கைலாசநாதர் கோயில் படித்துறையில் 40 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் நடைபாதை, பெண்கள் உடைமாற்றும் அறை போன்றவற்றை ஏற்படுத்தி தந்துள்ளார்.ஆளும்கட்சிக்கே பாதிப்புவரும் தேர்தல்களில் இந்துக்களின் ஓட்டுக்கள் அ.தி.மு.க.,விற்கு கிடைக்கக்கூடாது என்று திட்டமிட்டே கலெக்டரும், அமைச்சரும் செயல்படுவதாக பக்தர்கள் வருத்தப்படுகின்றனர்.ஆனால் பல்வேறு இடங்களில் புஷ்கர விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி என முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர் படங்களுடன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளை பார்த்து பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.வரும் 23ம்தேதி வரை புஷ்கர விழா நடக்கவுள்ள நிலையில் இனியாவது ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.