ஷீரடி சாய்பாபா, 20 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த துறவி. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டினார். நோயாளிகளை குணப்படுத்தினார். இவரை கடவுளின் அவதாரம் என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்த தலத்தை வழிபட ஷீரடிக்கு வருகை புரிகின்றனர். வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்த ஷீரடி சாய்பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.
1838 செப்.28ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் ஷீரடி என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்து மதத்தில் பிறந்த இவர் இஸ்லாமிய முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பதினாறு வயதில் முதன் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்த பொழுது மகானாக காட்சியளித்ததார். மக்களுக்கு ஆன்மிகத் தத்துவங்களை எடுத்துக்கூறினார். அவரை தரிசிக்க வரும் பக்தர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய போதனைகளும், தத்துவங்களும், சாதாரண மக்கள் எளிதில் புரியும் விதத்தில் எளிமையாக இருந்தது. அவருடைய புகழ் எங்கும் பரவியது.
இறப்பு: இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட முதல் அவதாரப் புருஷர் எனப் போற்றப்பட்ட ஷீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், ஷீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
சமாதானமுடன் வாழுங்கள்:
* யாரிடமும் சண்டையிட வேண்டாம். சமாதானத்துடன் வாழுங்கள். பிறர் கடினமாகப் பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள். * பணமோ, உதவியோ கேட்டு நிற்பவருக்கு கொடுக்க மனமில்லாவிட்டால், நாய் போல குரைத்து விரட்டாதீர்கள். அன்பான வார்த்தைகளையாவது பேசுங்கள். * இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுங்கள். கடவுள் மீது திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். * வெறும் ஏட்டுக் கல்வியால் பயன் உண்டாவதில்லை. தனக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவனாக நல்வழியில் நடப்பதே கல்வி கற்றதன் பயனாகும். * கள்ளம் கபடமற்றவராக இருங்கள். வீண்விவாதத்தில் ஈடுபடாதீர்கள். பிறர் நலனில் அக்கறை செலுத்துங்கள். கடவுளின் அருளுக்கு பாத்திரமாவீர்கள். ஷீரடி பாபா