பதிவு செய்த நாள்
22
அக்
2018
11:10
திருச்சி: ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின், 12வது பட்டமாக, ஜீயர் ஸ்ரீ வராக மஹா தேசிக சுவாமிகள் நேற்று (அக்., 21ல்) பதவியேற்றார்.
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள, ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம், 300 ஆண்டுகள் தொன்மையானது. இந்த ஆஸ்ரமத்தில், 11 மகான்கள் எழுந்தருளி, அருளாசி வழங்கியுள்ளனர். 11வது பட்டமாக திகழ்ந்த, ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் சுவாமிகள், 29 ஆண்டுகளாக ஆசிரமத்தை சிறப்பாக நடத்தி வந்தார். கடந்த மார்ச், 19ம் தேதி, மாரடைப்பு காரணமாக, அவரது 84வது வயதில் முக்தியடைந்தார்.
அதனால், ஆஸ்ரம நிர்வாகிகள், 12வது பட்டம் ஜீயர் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் சுவாமிகள் எழுதிய உயிலில், 12வது ஜீயராக பதவி ஏற்க தகுதி உள்ளவர்களாக, மூன்று பேரை குறிப்பிட்டிருந்தார். அவர்களில், ஒருவர் இறந்து விட்டார்; மற்ற இருவர் குடும்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி, ஜீயர் பதவியை
ஏற்கவில்லை.
அதனால், ஆஸ்ரம கமிட்டி உறுப்பினர்கள், சிஷ்யர்களுடன் ஆலோசித்து, உரிய தகுதிகளுடன் கூடிய ஆச்சாரியனை, 12வது பட்டமாக தேர்வு செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து,
ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த, ஸ்ரீமன் யாமுனாச்சாரியார் சுவாமிகளை, 12வது ஜீயராக தேர்வு செய்தனர்.
அதன்படி, நேற்று (அக்., 21ல்) காலை 8:30 மணிக்கு, ஸ்ரீமன் யாமுனாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீ வராக மஹா தேசிக சுவாமிகள் என்ற திருப்பெயரில், ஆஸ்ரமத்தின், 12வது ஜீயராக பதவி யேற்றார்.
பதவியேற்பு நிகழ்ச்சியின் போது, பல்வேறு திவ்ய தேசங்களில் இருந்து பிரசாதங்கள் கொண்டு வரப்பட்டு, புதிய ஜீயராக பொறுப்பேற்றவருக்கு சமர்பிக்கப்பட்டது. பல்வேறு வைணவ
மாடாதிபதிகள், ஜீயர்கள் அருளாசி வழங்கினர்.
நிறைவாக, ஸ்ரீவராஹ மகாதேசிகன் சுவாமிகள், சிஷ்யர்கள் மற்றும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீரங்கம் முக்கிய வீதிகளில், புதிய ஜீயரின் பட்டிணப் பிரவேசம் நடந்தது.