பேரையூர்: மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டியை சுற்றியுள்ள ஏழு கிராமங்களில் உள்ள அம்மன்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்திருவிழா நடந்தது. இந்தாண்டு திருவிழா அக்., 30 துவங்கி மூன்று நாட்கள் நடந்தன. தேவன்குறிச்சி, டி.கல்லுபட்டி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரப்பட்டியிலிருந்து ஆறு தேர்கள் செய்யப்பட்டு வி.அம்மாபட்டிக்கு கொண்டு வரப்பட்டன. இந்த தேர்கள் மூங்கில்கள் மற்றும் வண்ண காகிதங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. வி.அம்மாபட்டியில் ஏழு கிராமத்து அம்மன் சிலைகளும் செய்யப்படுகின்றன. தேர்கள் வந்ததும், தயாராக இருந்த அம்மன் சிலைகளை அந்தந்த கிராமத்தினர் பெற்று, தங்களது தேரில் வைத்து, ஊர்வலமாக கொண்டு சென்றனர். தேர்கள் ஒவ்வொன்றும் 35 அடி வரை உயரமாக இருந்தன. விழாவையொட்டி கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.