பேதுரு... பீட்டர் என்பதன் தமிழாக்கம். சீடரான இவர் மீது தனி மதிப்பு கொண்டிருந்தார் இயேசு. நண்பர்களை உரிமையுடன் என்ன வேண்டுமானாலும் சொல்லித் திட்டினாலும் விளையாட்டாக எடுத்துக் கொள்வர். அதே போல இயேசுவும் ’சாத்தானே!’ என்று பீட்டரை சாடியிருக்கிறார். ஆனால் பீட்டர் கோபித்துக் கொண்டதில்லை. மாறாக அன்பைப் பொழிந்தார். இவரது ஊர் இஸ்ரேல் நாட்டிலுள்ள கப்பர்நகூம். இயேசு போல் அற்புதங்கள் செய்தவர் இவர். இறந்து போன தபீதாள் என்ற பெண்ணை உயிர்த்தெழச் செய்தார். ஊனமுற்ற ஒருவரை குணமாக்கினார். அந்தியோகியா திருச்சபையில் பணி செய்தார். பிரிட்டனிலும், பிரான்சிலும் ஊழியம் செய்த இவர் கி.பி.67ல் கைது செய்யப்பட்டு 9 மாதம் சிறையில் கை,கால்கள் கட்டப்பட்டு நிலையில் கிடந்தார். தண்ணீர், உணவு கூட வழங்கப்படவில்லை. நீரோ என்ற மன்னன் பீட்டரை சிலுவையில் அறைய உத்தரவிட்டான். “எனது குருநாதர் இயேசு சிலுவையில் நேராகத் தொங்க விடப்பட்டார். அந்த தகுதி எனக்கு இல்லை என்பதால் தலைகீழாகத் தொங்க விடுங்கள்,” என்றார். வாடிகன் மலை மீது சிலுவையில் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் எழுந்த ஆலயம் 16ம் நூற்றாண்டில் அழிந்ததால் தற்போது புதிதாக எழுப்பப்பட்டுள்ளது.