பதிவு செய்த நாள்
19
நவ
2018
11:11
ராமநாதபுரம்: தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் பத்தாவது மரபு நடை நிகழ்ச்சியில் நரிப்பையூர் உலகம்மன் கோயிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கபட்டது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் பத்தாவது மரபு நடை நிகழ்வு நரிப்பையூர், வேம்பாரில் நடந்தது. ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலைமை வகித்து பேசியதாவது: குதிரைமொழி பகுதியில் எட்டுக்கைகளுடன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ள உலகம்மன் (காளி) கோயில் உள்ளது. மேற்கூரை இல்லாத இக்கோயில் வெளிப்புறச் சுவர்களில் கி.பி.13 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் அழிந்தநிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு இக்கோயிலுக்கு தானம் வழங்கிய கல்வெட்டாக இருக்கலாம். இக்கல்வெட்டில் கமுதி அருகிலுள்ள எருமைகுளம், கடலாடி அருகிலுள்ள ஆப்பனுார் ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாற்பத்தெண்ணா மரப்படி, பூப்பலகை, நல்லுார்குளத்தில், ஆண்டபிரான், அழகிய பாண்டிய, செந்தாங்கி ஆகிய சொற்கள் இதில் காணப்படுகின்றன. அதேபோல் பிழைபொறுத்தம்மன் குடியிருப்பு பகுதியிலும் எட்டுக்கைகளையுடைய காளி கோயில் உள்ளது. கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இதை பிழைபொறுத்தம்மன் என்கிறார்கள். மதுரை ஐராவதநல்லுாரில் இதே சிலை போன்று அச்சு அசலாய் ஒரு சிலை உள்ளது. இரு சிலைகளும் மதுரையில் ஒரே இடத்தில் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். மதுரைக்கும், நரிப்பையூருக்கும் இடையே உள்ள தொடர்பை இதன் மூலம் அறிய முடிகிறது. பின்பு வேம்பாரில் உள்ள சர்ப்பமடம், மாலைக்கோயில், அழிந்துபோன சிவன் கோயில் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார். நரிப்பையூர் பற்றிய சிறு நுால் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வரலாற்றுச் சிறப்புகளை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.