பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
கூடலூர்: பாரம்பரியம், பண்பாட்டை காப்பாற்ற கர்நாடகா, ஆந்திராவில் இருந்து இளம் பெண்களை சபரிமலைக்கு அழைத்து வரமாட்டோம், என, ஆயிரம் கி.மீ.,க்கு மேல் நடந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தேனி மாவட்டம் கூடலூரில் தெரிவித்தனர்.
சபரிமலைக்கு செல்வதற்காக நேற்று (டிசம்., 5ல்) கர்நாடகாவில் இருந்து குருசாமி சியாம்சுந்தர் தலைமையில் 12 பக்தர்களும், ஆந்திராவில் இருந்து குருசாமி வசந்த் தலைமையில் 210 பக்தர்களும் கூடலூர் வழியாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்றனர்.சியாம் சுந்தர் கூறியபோது, நாங்கள் பல ஆண்டாக சபரிமலைக்கு நடந்து செல்கிறோம். ஆயிரம் கி.மீ., மேல் நடந்து வருகிறோம் என்ற எண்ணமே தோன்றவில்லை.
வழியில் தங்கி சமையல் செய்து சாப்பிட்டு ஓய்வெடுத்த பின் மீண்டும் கிளம்புவோம். நவ. 11 ல் பெங்களூருவில் இருந்து கிளம்பினோம். நாளை அல்லது நாளை மறுநாள் சபரிமலைக்கு சென்று விடுவோம். கோயில் பாரம்பரியம், பண்பாட்டை காப்பாற்ற கர்நாடகா, ஆந்திராவில் உள்ள அனைத்து குருசாமிகளும் இளம் பெண்களை சபரிமலைக்கு அழைத்து வரமாட்டோம் என தீர்மானமாக எடுத்துள்ளோம், என்றார்.