நமக்காக இயேசுநாதர் உயிர் கொடுத்தார். உலக மக்களின் உற்ற தோழனாக அவர் விளங்கினார்.‘‘ஒருவன் தன் சிநேகிதனுக்காக ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை,” என்று பைபிள் குறிப்பிடுகிறது.ஒரு சிறைக்கூடத்தில் பல கைதிகள் அடைக்கப்பட்டுஇருந்தனர். அங்கிருந்து ஒரு கைதி தப்பினால், பத்து பேரை பட்டினி போட்டு கொன்று விடுவார்கள். இப்படி செய்தால், கைதிகள் தப்ப நினைத்தாலும், சக கைதிகள் அவனை காட்டிக் கொடுத்து விடுவார்கள் என சிறை நிர்வாகம் நம்பியது.ஒருமுறை ஒரு கைதி யாருக்கும் தெரியாமல் தப்பிவிட்டான். சிறைநிர்வாகம் பத்துபேரை தேர்ந்தெடுத்து ஒரு அறையில் தள்ளியது. அதில் ஒருவன் மட்டும் குடும்பஸ்தன். தன் மரணத்துக்குப் பிறகு மனைவி, பிள்ளைகள் சிரமப்படுவார்களே என புலம்பினான். ஒரு கிறிஸ்தவ மத குருவும் சிறையில் இருந்தார். அவர் அதிகாரிகளிடம் சென்று, ‘குடும்பஸ்தனான அந்தக் கைதிக்கு பதிலாக என்னை பட்டினி போட்டு கொல்லுங்கள். அவனை விடுவித்து விடுங்கள்,” என கேட்டுக்கொண்டார். அதிகாரிகளும் அதை ஏற்றனர். அவர் பட்டினியாய் கிடந்து இறந்தார்.முன்பின் தெரியாதவராயினும், யார் ஒருவர் பிறருக்காக உயிரையும் கொடுக்கத் துணிகிறாரோ அவரே மனிதரில் மாணிக்கம்.