நத்தம்:நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட அளவில் நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா பிரபலம். இதற்காக நேற்று காலை அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜையுடன் அம்மன் உருவத்துடன் கூடிய கொடியேற்றப்பட்டது.இன்று (பிப்.13) காலை கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்குகின்றனர். பிப்.18 அன்று தேர்சட்டம் போடும் நிகழ்வு நடக்கிறது. முக்கிய நாட்களில் சிம்ம வாகனம், அன்னவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் பவனி வருகிறார். பிப்.25 அன்று அரண்மனை பொங்கல் வைக்கப்பட உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.26 ல் அக்னிச்சட்டி எடுத்தல், கழுமரம் ஏற்றம் மற்றும் பூக்குழி இறங்கும் நிழ்ச்சி நடக்கிறது. மறுநாள் பூப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது. செயல் அலுவலர் பாலசரவணன், கோயில் பூஜாரிகள் வகையறாவினர், ஆவின் துணைத்தலைவர் சிவலிங்கம் மற்றும் பொதுமக்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், சுகாதார ஆய்வாளர் சடகோபி மேற்பார்வையில் சுகாதார பணிகள் நடக்கிறது. நத்தம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.