பதிவு செய்த நாள்
18
பிப்
2019
03:02
உத்திரமேரூர்:- கடம்பநாதசுவாமி கோவிலில், மூன்று ஆண்டுகளாக நடக்காத, பங்குனி உற்சவ விழா, இந்த ஆண்டாவது நடக்குமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், வெங்கச்சேரி ஊராட்சி கடம்பர் கோவில் கிராமத்தில், அறநிலையத் துறைக்கு உட்பட்ட, கடம்பநாத சுவாமி கோவில் உள்ளது.இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் போது, ஒரு வாரம், உற்சவ விழா நடப்பது வழக்கம்.
விழாவின் போது, இளையனார் வேலூரில் இருந்து எழுந்தருளும் முருகப்பெருமான் சுவாமி, வெங்கச்சேரி, ஆதவப்பாக்கம், புத்தளி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக ஊர்வலமாக வந்த பின், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும்.இதில், உச்சிக்கொல்லைமேடு, காவாம்பயிர், செம்புலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், செய்யாற்றில் கூடி, சுவாமியை தரிசிப்பர்.
இந்த பங்குனி உற்வச விழா, மூன்று ஆண்டுகளாக நடக்காததால், கிராம மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கோவிலுக்குச், சொந்தமான நிலங்கள், மாவட்டத்தின் பல பகுதிகளிலும், வெளி மாவட்டங்களிலும் உள்ளன.கோவிலுக்கு ஆண்டுதோறும் நல்ல வருமானம் கிடைக்கிறது. எனினும், கோவில் நிர்வாக சீர்கேடு காரணமாக, விழா நடைபெறாமல் உள்ளது.
விழா நடக்காததால், பாரம்பரியமான பண்பாட்டு நிகழ்ச்சிகளும் மறைந்து வருகின்றன. இந்தாண்டு பங்குனி உற்சவ விழா நடத்த, கோவில் நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.