பெண் ஒருத்தி பிறரைக் குறை சொல்லி பொழுது போக்குவாள். இதனால் அவளுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. ஒருநாள் அவள் தன் செயல்களை எண்ணி வருந்தினாள். “ஆண்டவரே! நான் அநேகரைப் புண்படுத்தியிருக்கிறேன். அவர்களைக் குறித்துப் பேசியதை நான் எப்படி திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்?” என வாய் விட்டு பிரார்த்தித்தாள். இதைக் கேட்ட ஒருவர், “நீ போய் ஒரு பை நிறைய கோழி இறக்கைகளைச் சேகரித்து, உன் வீட்டில் இருந்து இங்கு வரும் வழியெங்கும் சிதறிக் கொண்டே வா” என்றார். அவளும் அப்படியே செய்தாள். “சரி! நீ இப்போது உன் வீட்டுக்குத் திரும்பு. வழியில் நீ சிந்திய இறக்கைகளைப் பொறுக்கி பையில் வைத்துக்கொள். அதை என்னிடம் கொண்டு வா,” என்றார். அவள் அங்கிருந்து கிளம்பினாள். சிந்திய இறக்கைகள் எதையும் காணவில்லை. அவை காற்றில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டது. “இறைக்கைகளை சேகரிக்க முடியவில்லை” என்று அவரிடம் தெரிவித்தாள். அவளிடம், “உன் வார்த்தைகளும் அப்படித்தான். வார்த்தைகளைச் சிந்தினால் பொறுக்கவே முடியாது. அதனால், இனிமேலாவது யோசித்துப் பேசு” என்றார். “வீணான வார்த்தைளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” என்கிறது பைபிள். ஆம்! வீண்பேச்சு குறித்து கடவுளின் முன் விசாரணைக்கு வரும். அப்போது பதிலளிக்க நேரிடும்.