சித்ரா பவுர்ணமியன்று ஈசனுக்கு சுத்தான்னம் எனப்படும் வெண் சோற்றில் நெய் கலந்து படைத்தால் நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். சித்ரா பவுர்ணமியன்று காஞ்சி வரதனை பிரம்மதேவன் பூஜிப்பார். பிரம்மன் வரதனுக்கு நிவேதிக்கும் பிரசாதம் கமகமவென மணம் வீசுமாம். உண்ட திருப்தியை வரதனின் வதனத்தில் காணலாம் என்பர். குற்றாலத்தில் உள்ள செண்பாகதேவிக்கு சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும். அப்போது சந்தன வாசனையோடு கூடிய மழை பெய்யும் என்பது நம்பிக்கை. ஆதிசங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் சாத்துமுறை, சித்ரகுப்தர் திருக்கல்யாணம், ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச சேவை ஆகியவை சித்ரா பவுர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப்படும் வைபவங்கள். சித்ரா பவுர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் செய்யும் வைபவம் நடக்கிறது.
நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாக ஐதீகம். தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி என்னும் ஊருக்கு மேற்கே தீர்த்தத்தொட்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது சித்திரபுத்திர நாயனார் கோயில். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்திற்கு அடுத்ததாக உள்ள சித்திரபுத்திரர் கோயில் இது. நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்ரகுப்தன் அதிபதி என்றும், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் அத்தோஷம் நீங்கும் என்பதும் நம்பிக்கை. சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் அவர்களது பாவங்களைக் குறைப்பார் என்பதும் ஐதீகம்.