பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
12:04
திண்டுக்கல்: திண்டுக்கல், பழநி, வேடசந்துார், சின்னாளப்பட்டி உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள கோயில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது. திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.8 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. திருவிழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது.
நேற்று 10 ம் திருவிழாவில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அதன் பின் மணமகள் அம்பாள் அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிறகு அபிராமியம்மனுக்கும் பத்மகிரீஸ்வரர் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஸ்ரீ சண்முகவேல் மில்ஸ் குரூப் தலைவர் பி.எஸ்.வேலுச்சாமி, மேனேஜிங் டைரக்டர் சி.கந்தசாமி மற்றும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பூ, மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. இரவில் சுவாமி
அம்பாள் மணக்கோலத்தில் பூப்பல்லக்கில் வீதியுலா வந்தனர். இன்று மாலை 5:30 மணிக்கு திருத்தேர் பவனி நடக்கிறது.
பழநி இடும்பன் கோயில்: பழநி இடும்பன் கோயிலில் சிவன் பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். இதையொட்டி நேற்று பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் சார்பில், யாகபூஜையில் கும்பகலசங்கள் வைத்து, சிவகிரிநாதர், உமாமகேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சர்வ அலங்காரத்தில் திருக்கல்யாணம் நடந்தது. பெண்கள் தாலிகயிறு மாற்றிக்கொண்டனர். பக்தர்கள் மொய்எழுதினர், திருக்கல்யாண விருந்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநி பெருமாளுக்கு திருக்கல்யாணம்: பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் திருக்கல்யாணம் நடந்தது. நாளை வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. பழநி மேற்குரதவீதி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,11ல் துவங்கி 20 வரை நடக்கிறது. நேற்று பெருமாளுக்கு அபிஷேகம், பூஜையுடன், இரவு திருக்கல்யாணம் நடந்தது. சஷேவாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். நாளை ( ஏப்.,19ல்) காலையில் தேரோட்டம் நடக்கிறது.
வெள்ளித் தேரோட்டம்: நாளை(ஏப்.,19) சித்ராபவுர்ணமியை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து 108 பால்குடங்கள் ஊர்வலமாக சென்று காலையில் திருஆவினன்குடி கோயில் முருகருக்கு அபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 8:00மணிக்கு பெரியநாயகியம்மன்கோயிலில் வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணைஆணையர்(பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.
வேடசந்துார்: வேடசந்துார் காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோயிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. அக்ரஹாரம் விநாயகர் கோவிலில் இருந்து சீர் வரிசை அழைத்து வரப்பட்டு உற்ஸவ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. தேங்காய் மற்றும் பூப்பந்தை உருட்டி விளையாடுதல், உற்சவ மூர்த்திகளை ஊஞ்சலில் வைத்து, ஊஞ்சலை ஆட்டுதல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வடமதுரை ரோட்டில் உள்ள மண்டபம் புதுாரில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராமஅழகர் கோயில் சித்திரை திருவிழாவில், கீழக்கோட்டையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, பொன்விழா மண்டபத்தில், சுவாமிக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, விசஷே யாகசாலை பூஜைகள், ஆராதனைகளுக்குப்பின், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு வினியோகிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் தாலிக்கயிறு மாற்றி வழிபட்டனர். சுவாமி ஊர்வலம், திருப்பள்ளி எழுந்தருளல் நடந்தது. ஆத்துார் எம்.எல்.ஏ., ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.