பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
11:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் (அழகர்) கோயில், சித்திரைத் திருவிழாவில் நேற்றுமுன்தினம் இரவு பெருமாள் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். தொடர்ந்து விடிய, விடிய தசாவதார சேவை நடந்தது.
ஏப்., 19 ல் அதிகாலை 3:25 மணிக்கு பூப்பல்லக்கில் மஞ்சள் பட்டு உடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர், மறுநாள் குதிரை வாகனத்தில் எதிர்சேவை நடந்தது. அப்போது அழகருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி வரவேற்றனர்.நேற்று முன்தினம் காக்காதோப்பு பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் அழகர் புறப்பட்டார். வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படிகளில் இரவு 8:00 மணிக்கு, மண்டூக(தவளை உருவம்) மகரிஷிக்கு, துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கி விமோசனம் அளித்தார்.
தொடர்ந்து இரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில், பெருமாள் அர்ச்சாவதாரம், மச்ச, கூர்ம, வாமன,பரசுராம, பலராம, ராம, மோகினி உள்ளிட்ட 8 அவதாரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் விடிய, விடிய பெருமாளை தரிசித்தனர். நேற்று இரவு கருடவாகனத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இன்று ராஜாங்க திருக்கோலத்தில் பட்டுப்பல்லக்கிலும். நாளை காலை 7:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் மீண்டும்கள்ளழகர் திருக்கோலத்துடன், மேள, தாளம் முழங்க, வாண வேடிக்கையுடன்புஷ்பப்பல்லக்கில் வீதிவலம் வருகிறார். பின்னர் மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்து,இரவு கண்ணாடி சேவை நடக்கும்.