பதிவு செய்த நாள்
27
மே
2019
12:05
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய ஆதிதிராவிடர் பகுதி கோவில்களில், அறநிலையத் துறை அதிகாரிகள், நேற்று 26ல், ஆய்வு மேற்கொண்டனர்.
ஹிந்து அறநிலையத் துறையின், ஆதிதிராவிடர் பகுதி திருக்கோவில் திருப்பணி திட்டத்தில், சேதமடைந்த கோவில் சீரமைப்பு பணிக்கு, ஒரு கோவிலுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் கோவிலை சீரமைக்க, மாவட்ட அறநிலையத் துறை அலுவலகத்தில், கிராம மக்கள் ஒப்புதலோடு, பழுதடைந்த கோவிலின் புகைப்படத்துடன் விண்ணப்பம் பெறப்படுகிறது.அதன்படி, உத்திரமேரூர் ஒன்றிய ஆதிதிராவிடர் பகுதிகளில் உள்ள பழுதான கோவில்களின் திருப்பணிக்கு நிதி கேட்டு, ஏற்கனவே விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.சீரமைப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட கோவில்களில், காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர், ரமணி மற்றும் அதிகாரிகள், நேற்று 26 ல், ஆய்வு செய்தனர்.
இது குறித்து, ஹிந்து அறநிலையத் துறை, உத்திரமேரூர் ஒன்றிய கோவில் நிர்வாக அலுவலர், செந்தில்குமார் கூறியதாவது:உத்திரமேரூர் ஒன்றியத்தில், புதூர் மேல்பாக்கம், புல்லம்பாக்கம் பகுதி சிவன் கோவில்களை சீரமைக்க, நிதி கேட்டு விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.அதேபோல், அழிசூர், காவியதண்டலம், திணையாம்பூண்டி, மேல்பாக்கம், கரும்பாக்கம் ஆகிய கிராமங்களில், அம்மன் கோவில்களும்; குருமஞ்சேரி, வெங்காரம் ஆகிய கிராமங்களில் விநாயகர் கோவில்களில் சீரமைப்பு பணி செய்யவும், நிதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இக்கோவில்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில், திருப்பணி மேற்கொள்வதற்கான நிதி வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.