பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
03:06
வீரபாண்டி: சக்தி கணபதி, சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
சேலம், நெய்க்காரப்பட்டி, சக்தி கணபதி, சக்தி காளியம்மன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த, 12ல் தொடங்கியது. நேற்று முன்தினம், விக்கிரகங்களுக்கு கண் திறக்கப்பட்டு, 108 மூலிகைகளால், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையுடன், நான்கு கால யாகபூஜை தொடங்கியது. நேற்று (ஜூன்., 14ல்) காலை, யாகசாலை பூஜை, பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, யாகத்தில் வைத்த புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள், தலையில் சுமந்து, கோவிலை வலம் வந்தனர்.
முதலில், சக்தி கணபதி கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். தொடர்ந்து, சக்தி காளியம்மன் கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீரை ஊற்றினர். இதையடுத்து, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது, தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின், மூலவர் விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஜூன்., 15ல்) முதல், மண்டல பூஜை தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, ஊர்மக்கள் செய்திருந்தனர்.
அதேபோல், சேலம், கல்பாரப்பட்டி, நாச்சியாரம்மன், முத்தாலம்மன், மாரியம்மன் கோவில் களின் கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, மூலவர்கள் நாச்சியாரம்மன், முத்தாலம்மன், மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து, பூஜை செய்யப்பட்டது. மேலும், காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில்; ஏற்காடு, செம்ம நத்தம், நார்த்தஞ்சேடு கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில்; தலைவாசல், ஆரத்தி அகரம் கிராமத்திலுள்ள, கிளிக்கூட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.