பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
12:06
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி, திருப்பதியில் நடைபெறுவதைபோல், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவாரி வெங்கடாஜலபதிக்கு நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்களின் ‘ஜெய் ஆஞ்ஜநேயா...’ கோஷம் விண்ணை முட்டியது. புதுச்சேரி அருகே உள்ள பஞ்சவடீயில், 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே உள்ள வலம்புரி மகா கணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி சன்னிதிகளுடன், ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு புதிதாக சன்னிதி அமைக்கப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, யாகசாலை பூஜைகள், கடந்த 17ம் தேதி துவங்கியது.
நுாற்றுக்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் பங்கேற்று பூஜைகளை நடத்தினர். நேற்று, எட்டாம் கால பூஜையை தொடர்ந்து, காலை 8:30 மணியளவில், யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டன. கங்கை, யமுனை, சரயூ, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பாலாறு, துங்கபத்ரா போன்ற புனித நதிகளில் இருந்தும், தமிழகத்தில் அமைந்துள்ள சைவ, வைஷ்ண கோவில்களின் புனித குளங்களில் இருந்தும் எடுத்து வரப்பட்டு, ஒரு வாரமாக, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் நிரம்பிய கலசங்களை சுமந்தவாறு பட்டாச்சாரியார்கள் புறப்பட்டனர். யானை முன்னே செல்ல, மேள தாளங்கள் முழங்க, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓத, புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வந்து, ஐந்து நிலை ராஜ கோபுரம், 118 அடி உயரமுள்ள மூலவர் விமானம் மற்றும் அனைத்து சன்னிதி விமானங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன.
காலை 9:05 மணிக்கு, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை, சகடபுர ஸ்ரீவித்யாபீடாதீஸ்வர ஸ்ரீவித்யாபிநவ ஸ்ரீகிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள் நடத்தி வைத்தார். ராமர் சன்னிதி விமானத்துக்கு புனித நீரை ஊற்றி, பஞ்சவடீ கோவிலின் வேத சாஸ்திர ஆலோசகர் ரமணி அண்ணா நடத்தி வைத்தார். கும்பாபிஷேகம் நடந்தபோது, மூன்று கருடன்கள் வானில் வட்டமிட, ‘ஜெய் ஆஞ்ஜநேயா...’ என பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. விழாவில் புதுச்சேரியில் இருந்தும், தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன், கும்பாபிஷேக குழு செயலர் பழனியப்பன், டிரஸ்டிகள் கே.வெங்கட்ராமன், கச்சபேஸ்வரன், செல்வம், கோவில் ஸ்தாபகர் சந்தானம் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவை, தாமல் ராமகிருஷ்ணன் நேரடி வர்ணனை செய்தார். கும்பாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி திருப்பதியில் நடைபெறுவதைபோல், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவாரி வெங்கடாஜலபதிக்கு நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பக்தர்கள் பரவசம்: புதுச்சேரி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களாக மழை இன்றி வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று பஞ்சவடீ கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்த இரவே, இடியுடன் கூடிய மழை பெய்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு ஏற்பாடு: சபாஷ் போலீஸ்
பஞ்சவடீ கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினத்தில் இருந்தே, விழுப்புரம் மாவட்ட போலீசார், கோவிலை சுற்றி சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து, போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜ் மேற்பார்வையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., சந்தோஷ்குமார், எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், கோவிலை சுற்றிலும் 150 பெண் காவலர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேகத்தின்போது, பக்தர்கள் ஒரே நேரத்தில் கோவிலுக்குள் நுழையாமல் தடுத்து, நெரிசலை கட்டுப்படுத்தினர். போலீசாரின் சிறப்பான பணியை, பக்தர்கள் வெகுவாக பாராட்டினர். போலீஸ் டி.ஜி.பி., ராஜேந்திரன், முன்னாள் ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், ஐ.ஜி.,க்கள் ஸ்ரீதர், பெரியய்யா, முருகன், கணேஷமூர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் விழாவில் பங்கேற்றனர்.