திருமங்கலம்: திருமங்கலம் அருகே சவுடார்பட்டியில் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து வரும் பழமை வாய்ந்த மீனாட்சி அம்மன் கோயிலை அறநிலையத்துறை சீரமைக்க முன்வர வேண்டும்.இக்கோயிலில் 15 ஆண்டுகளாக துாண்கள், சுவர்கள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. கோயில் இடியும் அபாயமும் உள்ளது.
பாதுகாப்பு குறைவான இக்கோயிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மீனாட்சி, பெருமாள் சிலைகள் சில ஆண்டுகளுக்கு முன் மாயமாயின. மேலும் மீனாட்சி அம்மன், பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் உற்ஸவர் சிலைகள் பாதுகாப்பு கருதி கோயிலிருந்து எடுத்து செல்லப்பட்டு கோயில் குடிசை வீட்டில் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சிலைகள் மாயமானதாக எழுந்த தகவலையடுத்து கோயில் வீட்டில் இருந்த சிலைகளை அறநிலையத்துறையினர் சமீபத்தில் பார்வையிட்டனர்.சேதமடைந்த இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்கள், சொத்துக்களை மீட்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.