கேரள மாநில மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரம் என்ற ஊரில் உள்ள திருமாதம் குன்னு பகவதி அம்மன் கோயில் சுமார் 1,600 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் உள்ள லிங்கம், பார்வதி தேவியால் பூஜிக்கப்பட்டது என்கின்றனர். இந்த லிங்கத்தை பார்வதிக்கு தெரியாமலேயே தனது பக்தனான சூரிய வம்சத்தைச் சேர்ந்த வேலத்ரி மகாராஜாவுக்கு வழங்கிவிட்டார் சிவபெருமான். இதனால் கோபமுற்ற பார்வதி, தனது அம்சமான பகவதியிடம், இந்த லிங்கத்தை பூலோகத்திலிருந்து கைலாயத்திற்கு எடுத்துவரக் கூறினாள். லிங்கத்தை பகவதி எடுக்க முயன்றபோது, அதை மன்னன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். ஆனாலும் பகவதி விடாமல் முயற்சிக்க, லிங்கம் இருகூறாகப் பிளந்தது. உள்ளே ஜோதி வடிவில் சிவபெருமானும் பார்வதியும் காட்சியளித்தனர். பின்னர், மன்னனின் தீவிர பக்தி காரணமாக, தான் பூஜித்து வந்த அந்த லிங்கத்தை விட்டுக்கொடுத்தார் பார்வதி தேவி என்கிறது இக்கோயில் வரலாறு. இன்றும் இங்குள்ள சிவலிங்கம் பிளவு பட்ட நிலையிலேயே உள்ளது. இதனுள் தான் சிவனும், பார்வதியும் காட்சி தருவதாக ஐதிகம்.