பதிவு செய்த நாள்
19
செப்
2019
11:09
ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கபடும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில், செப்.21 முதல் புரட்டாசி சனி உற்ஸவம் துவங்குகிறது. இக்கோயிலில் புரட்டாசி உற்ஸவத்தில் 5 சனிக்கிழமைகளிலும், ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்க தென்மாவட்டத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த பக்தர்கள் வருவது வழக்கம். இந்த வருடமும் நாளை மறுநாள் (செப்.21) முதல் உற்ஸவம் துவங்குவதை முன்னிட்டு, அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கு சுப்ரபாத பூஜை மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அதனையடுத்து பக்தர்கள் பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மாலையில் பெருமாள் வீதியுலா நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நடந்தது. தாசில்தார் கிருஷ்ணவேணி, டி.எஸ்.பி., ராஜேந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் தீயணைப்பு, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் மருத்துவம் உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.வழக்கம்போல் பக்தர்க ளுக்கு சிறப்பு பஸ் இயக்குதல், பார்க்கிங் வசதி, கழிப்பறை, தண்ணீர், பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.ராஜபாளையம், கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.