மதுரை மீனாட்சியம்மன் இன்று (அக்., 1ல்) வீணை தட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.
பிரம்மாவின் மகன்களான சனகாதி முனிவர்கள் ஞானத்தை அடைய குருநாதரை தேடி அலைந்தனர். இதையறிந்த சிவன் தட்சிணா மூர்த்தி கோலத்தில் ஆலமரத்தின் அடியில் தெற்கு நோக்கி காட்சியளித்தார். அவர்களின் சந்தேகங்களைப் போக்கும் விதமாக விளக்கம் அளித்தார். இறுதியாக சின் முத்திரையைக் காட்டி அமைதி, ஆனந்தம் அடையச் செய்தார். இவரிடம் ஒருமுறை சாமவேதத்தை வீணையில் இசைக்கும்படி நாரதர், சுக்ர முனிவர்கள் வேண்டினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வீணை உருவாக்குவது பற்றியும், அதை முறையாக இசைப்பது பற்றியும் எடுத்துரைத்தார் சிவன். இக்கோலத்தை தரிசித்தால் இசை ஞானம், புத்தி சாதுர்யம், குறையில்லாத வாழ்வு அமையும்.
பட வேண்டிய பாடல்: பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புய மேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.