திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி விழாவில், இன்று அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
திருத்தணி அடுத்த மேல்திருத்தணி பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு நிகழ்ச்சியும், மாலை அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது. இன்று காலை 10:30 மணிக்கு அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் எதிரே, 40 அடி உயரத்திற்கு மேல் உள்ள பனை மரத்தை நட்டும், அர்ச்சுனன் தவம் புரிவதற்காக, பனை மரத்தில் ஏற்படுத்திய படிகளில் பாடல்கள் பாடியவாறு உச்சிப் பகுதிக்கு சென்று சிவபெருமானை நினைத்து தவம் புரிந்தார். அதே நேரத்தில், பனைமரத்தின் அடியில் பெண்கள், குழந்தை வரம் வேண்டி படுத்து தவம் செய்தனர். இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.