கமுதி: கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் உள்ள தர்ம முனிஸ்வரர் கோயிலில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு 128ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு தர்ம முனிஸ்வரர், கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் அபிஷேகம் சிறப்புபூஜை நடந்தது. கிராமத்தின் முக்கிய வீதியில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி,வேல் குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்பு தர்ம முனிஸ்வரர், கருப்பணசாமிக்கு பால் அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேர்த்திக்கடன் வைத்து நிறைவேறிய பக்தர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 128 ஆடுகளை பலியிட்டு 2500 கிலோ கறி சமைக்கப்பட்டது.பின்பு தர்ம முனீஸ்வரருக்கு படையலிடப்பட்டு சிறப்புபூஜை செய்தனர்.அதனை தொடர்ந்து மக்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.