காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி 5 தேர் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 20ம் தேதி இரவு அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு, வரும் 21ம்தேதி செண்பகத் தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளல், 25ம் தேதி பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் செண்பக தியாகராஜர் தேரில் எழுந்தருள தேர் திருவிழா நடக்கிறது. தேர் திருவிழா விற்காக 5 தேர் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்காக தேரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த செட் அகற்றப்பட்டு தேரில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.