மங்கலதேவி கண்ணகி கோயில் முழுமையாக அழிவதற்குள் சீரமைக்கப்படுமா?



கூடலுார்: தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. முழுமையாக அழிவதற்குள் கோயிலை சீரமைக்க தொல்லியல்துறை முன் வரவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லை விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டும் கோயிலில் விழா கொண்டாடப்படும். தமிழக கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மற்ற நாட்களில் யாரும் அங்கு செல்ல அனுமதி இல்லை. கேரள வனத்துறையினர் மட்டும் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். கோயில் கட்டப்பட்ட கல்வெட்டுகளுடன் கூடிய கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. தற்போது அதில் பல கற்கள் மாயமாகியுள்ளது. மேலும் கண்ணகி கோயிலின் மேற்பகுதி இடியும் நிலையில் உள்ளது. தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் சேதமடைவது அதிகரித்துள்ள நிலையில் எவ்வித சீரமைப்பும் செய்யாததால் இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக அழியும் அபாயம் உள்ளது.  1976ல் கூடலுாரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்பு குழு துவக்கப்பட்டு கோயிலை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்து இக்குழு அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழக வனப்பகுதி வழியாக கோயிலுக்கு ரோடு அமைக்க ரூ.20 லட்சம் அரசு ஒதுக்கியது. ரோடு அமைக்கும் பணி முழுமை அடைவதற்குள் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதே சமயம் அதே ஆண்டு கேரள வனப்பகுதி வழியாக தேக்கடியில் இருந்து கண்ணகி கோயிலுக்கு அவசர அவசரமாக கேரள வனத்துறையினர் ரோடு அமைத்தனர். வாகனங்கள் செல்லும் வகையில் அமைத்த இந்த ரோட்டை வைத்துதான் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று கண்ணகி கோயிலில் கேரள அரசின் பலத்த கெடுபிடிகளுக்கு இடையே தமிழக பக்தர்கள் பொங்கலிட்டு வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


சேதமடைந்து வரும் கண்ணகி கோயிலை சீரமைக்க 2014ல் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முழுமையாக சீரமைத்து தர வலியுறுத்தி கேரள தொல்லியல் துறை மற்றும் வனத்துறை மீதும் வழக்கு தொடர்ந்தனர். இதன் எதிரொலியாக 2016 ஏப். 5ல் கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், கண்ணகி கோயிலை தொல்லியல் துறையும் கேரள வனத்துறையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் தீர்ப்பை அமல்படுத்த கோரி மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணைக்கு பின் கண்ணகி கோயிலை சீரமைக்க ரூ.39 லட்சத்து 33 ஆயிரத்து 725க்கு திட்ட மதிப்பீடு செய்து டெண்டர் அறிவிப்பை நீதிமன்றத்தில் தொல்லியல் துறை வழங்கியது. டெண்டர் உறுதியானவுடன் விரைவில் கோயில் சீரமைப்பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித சீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டும் விழா கொண்டாடிவிட்டு அதன் பின் கோயிலை கண்டு கொள்வதில்லை. கோயில் முழுமையாக அழிவதற்குள் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்குமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்