பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கருட கொடியேற்றத்துடன் துவங்கியது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பரமஸ்வாமி வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அஹாபில மடம் 45 மற்றும் 46வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலாகும். இங்கு இன்று காலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அப்போது கருட கொடியேற்றப்பட்டு அபிஷேகம் நடந்து, மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் பெருமாள் அமர்ந்து வீதி உலா வந்தார். தினமும் சிம்மம், சேஷம், கருடன், அனுமன் வாகனங்களில் அருள்பாலிப்பார். ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் இரவு பூ பல்லக்கிலும், ஜூலை 28 காலை நவநீத கிருஷ்ணன் சேவை மற்றும் இரவு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் சேவை சாதிப்பார். ஆடி தேரோட்டம் ரத வீதிகளில் ஜூலை 29 காலை நடக்க உள்ளது. ஜூலை 30 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.