இலக்கியங்களில், கொடியின் பெயரால் பாண்டியர்கள் மீனவன் என்றும், சேரர்கள் வில்லவன் என்றும் சோழர்கள் புலியன் என்றும், பல்லவர் நந்தியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். கொடியேற்றம் நடைபெற்றபின் கொடி மரத்தில், முப்பத்து முக்கோடி தேவர்கள் 48,000 ரிஷிகள், கின்னரர், கிம்புருஷர், வித்யாதரர் முதலான பதினெண் தெய்வ கணங்களுடன் கோயிலுக்குரிய தெய்வம் தமது பரிவாரங்களுடன் மகிழ்வுடன் வீற்றிருந்து அருள்புரிகிறது என்கின்றன பூஜா பத்ததி நூல்கள். ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரியதான வாகனத்தின் படமே அத்தெய்வ கோயிலில் ஏற்றப்படும் கொடியில் வரையப்படுகிறது. அந்த வாகனத்தின் மீது அத்தெய்வத்துக்கு உரிய முதன்மை பெற்ற ஆயுதமும் சேர்த்தே எழுதப்படுகிறது. தெய்வங்களையும் கொடியின் பெயரால் அழைத்தனர். சிவபெருமான் இடபக்கொடியோன் என்றும், முருகனைச் சேவற்கொடியோன் என்றும், துர்க்கையை ஆளிக்கொடியாள் என்றும், மன்மதனை மகரகேதனன் என்றும், திருமாலைக் கருடக்கொடியோன் என்றும் அழைத்தனர். முன்னாளில் இப்போது இருப்பது போல் கோயில்களில் நிலையான கொடி மரங்கள் இல்லையென்றும் கொடிமர மேடை மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர். விழாக் காலங்களில் காட்டிலிருந்து புதிய நெடிய மரத்தை வெட்டிக்கொண்டு வந்து சீர்மைப்படுத்தி, உரிய பூசைகள் செய்து, அதைக் கொடிமரமாக நிறுத்தி, அதில் கொடியேற்று விழா கொண்டாடினர் என்கின்றனர். கொடிமரத்தில் கொடியாக ஏற்றப்படும் நீண்ட துணிக்கு துவஜபடம் என்பது பெயர். இதைத் தமிழில் கொடிச்சீலை என்றழைக்கப்படுகின்றனர். இது 3 முழ அகலமும் 30 முழ நீளமும் கொண்டதாகும்.