சபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்!



சபரிமலை அய்யப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள் தான். விரதமிருந்து, இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயனை 18-ம் படி ஏறிச்சென்று தரிசித்தலே மிகவும் சிறப்பானதாகும். சுவாமியை இவ்வாறு தரிசித்தால் தான் ஒரு மண்டலம் விரதமிருந்து கோயில் சென்று வந்ததன் முழுப் பலன்களையும் புண்ணியத்தையும் பெறமுடியும் என்பது ஐதீகம்.

இந்த 18 படிகளில் ஒவ்வொரு படியும் ஐயப்பனின் திருநாமங்களால் அழைக்கப்படுகிறது. அவையாவன:

1   - ஆம் படி    - குளத்தூர் பாலன்
2   - ஆம் படி    - ஆரியங்காவு அனந்த ரூபன்
3   - ஆம் படி    - எரிமேலி ஏழைப் பங்காளன்
4   - ஆம் படி    - ஐந்துமலைத் தேவன்
5   - ஆம் படி    - ஐங்கரன் சோதரன்
6   - ஆம் படி    - கலியுக வரதன்
7   - ஆம் படி    - கருணாகரத் தேவன்
8   - ஆம் படி    - சத்யப்பரிபாலகன்
9   - ஆம் படி    - சற்குண சீலன்
10 - ஆம் படி    - சபரிமலை வாசன்
11 - ஆம் படி    - வீரமணி கண்டன்
12 - ஆம் படி    - விண்ணவர் தேவன்
13 - ஆம் படி    - மோகினி பாலன்
14 - ஆம் படி    - சாந்த சுவரூபன்
15 - ஆம் படி    - சற்குண நாதன்
16 - ஆம் படி    - நற்குணக் கொழுந்தன்
17 - ஆம் படி    - உள்ளத்தமர்வோன்
18 - ஆம் படி    - ஸ்ரீ ஐயப்பன்

இந்த 18 படிகளுக்கான தத்துவங்களைப் பார்ப்போம்.

முதல் ஐந்துபடிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும்; 6 முதல்  13 படிகள்வரை அஷ்டமா சித்திகளையும்; 14, 15, 16 படிகள் மூன்று வித குண ங்களையும்; 17-ஆவது படி ஞானத்தையும்; 18-ஆவது படி அஞ்ஞானத்தையும்  குறிக்கின்ற வகையில் அமைந்துள்ளதாக ஐதீகம்.

சபரிமலை கோயிலில் அமைந்துள்ள 18 படிகளும் தெய்வாம்சம் நிறைந்தவை:
ஒன்றாம் படியில்     - சூரியன்
இரண்டாம் படியில்    - சிவன்
மூன்றாம் படியில்    - சந்திரன்
நான்காம் படியில்    - பராசக்தி
ஐந்தாம் படியில்    - செவ்வாய்
ஆறாம் படியில்        - ஆறுமுகப் பெருமான்
ஏழாம் படியில்        - புதன்
எட்டாம் படியில்    - மகாவிஷ்ணு
ஒன்பதாம் படியில்    - குரு பகவான்
பத்தாம் படியில்    - பிரம்மா
பதினோறாம் படியில்    - சுக்கிரன்
பன்னிரண்டாம் படியில்    - திருவரங்கன்
பதின்மூன்றாம் படியில்    - சனீஸ்வரன்
பதினான்காம் படியில்    - எமதர்மன்
பதினைந்தாம் படியில்    - ராகு
பதினாறாம் படியில்     - காளி
பதினேழாம் படியில்    - கேது
பதினெட்டாம் படியில்    - விநாயகர்

ஐயப்பன் சுவாமி கொடிய அரக்கியான மகிஷியை வதம் செய்தபோது பயன்படுத்திய ஆயுதங்கள் 18 அவை; வில், வாள், பரிசை, குந்தம், ஈட்டி, கைவாள், முள்தடி, முசலம்,  கதை, அங்குசம், பாசம், பிந்திப்பாலம், வேல், கடுநிலை, பாஸம், சக்கரம், பரிகம், சரிகை  இந்த 18 வகை ஆயுதங்களும் 18 படிகளாக அமையப்பெற்றன என்பதும் ஒரு ஐதீகம். சபரிசாஸ்தா ஐயப்பனைக் காண கடும் விரதமிருந்து வரும் பக்தர்கள் அனைவரும்  புனிதம் நிறைந்த - புண்ணியம் அருள்கின்ற இந்த 18 படிகளில் ஏறிச்சென்று அகிலம்  காத்திடும் அய்யப்பப்பெருமானை தரிசித்தலே சாலச்சிறந்ததாகும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்